நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.. உற்சாக வரவேற்புடன் குடியரசு தலைவர் உரை
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று உரையாற்றினார்.
ராம்நாத் கோவிந்த், குடியரசு தலைவரான பிறகு ஆற்றப்போகும் முதல் உரை இது என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவியது.
குடியரசு தலைவர் இன்று காலை 11 மணிக்கு தனது மாளிகையில் இருந்து குதிரை படை வீரர்கள் அணி வகுப்புடன் அழைத்து வரப்பட்டார். நாடாளுமன்ற வாயிலில், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ராஜ்யசபா தலைவரும், துணை குடியரசு தலைவருமான வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் வரவேற்பு அளித்து அவரை கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கான பொருளாதார விவரங்கள் அடங்கிய, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்தபின் இன்றையக் கூட்டம் நிறைவு பெறும். 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம்தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் தாக்கல் செய்யப்படுகிறது.
President Ram Nath Kovind leaves for Parliament. He will address the Joint Sitting of both Houses of Parliament shortly. #BudgetSession pic.twitter.com/X5Q6XbGXMC
— ANI (@ANI) January 29, 2018
முத்தலாக் தடுப்பு மசோதா உட்பட பல்வேறு முக்கிய மசோதாக்களும் இந்தகூட்டத் தொடரில் விவாதத்துக்கு வருகின்றன. இதற்கிடையே, பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று நடக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கூட்டுக் கூட்டமும் இன்று நடக்க உள்ளது.