ரயிலில் போகும்போதும் இனி சீரியல் மிஸ் ஆகாது- வரப்போகுது புது வசதி
டெல்லி: சதாப்தி ரயிலில் பயணிப்போர் கிரிக்கெட் போட்டிகளையும், தங்களுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சிகளையும் இனிமேல் லைவ்-ஆக கண்டு ரசிக்க முடியும்.
ரயிலில் டிவி மாட்டியிருப்பது என்னவோ பழைய செய்திதான். ஆனால் ஒவ்வொரு பயணியின் இருக்கைக்கு முன்பும் தனித்தனியாக டிவி மாட்டப்பட உள்ளது புதுசு.
ஆம்.. இந்திய ரயில்வே அமைச்சகம் அதுபோன்ற ஒரு வசதியை விரைவில் சதாப்தி ரயில்களில் அளிக்க உள்ளது. இதன்படி ஒவ்வொரு இருக்கையின் பின்புறத்திலும் ஒரு எல்சிடி டிவி பொருத்தப்படும்.
இதன் மூலம் கைக்கு எட்டிய தூரத்தில் தொலைக்காட்சியை பார்ப்பதுடன் பயணி தனக்கு தேவையான சேனல்களை மாற்றி வைத்து பார்த்துக்கொள்ள முடியும். முதல்கட்டமாக 80 டிவி சேனல்களை வழங்க உள்ளது ரயில்வே நிர்வாகம்.
டிவியிலிருந்து வெளியாகும் ஒலி பக்கத்து சீட்டில் இருப்பவருக்கு தொல்லை தராமல் இருக்க ஹைட்போன்களும் தொலைக்காட்சி பெட்டியுடன் இணைக்கப்பட்டிருக்குமாம். கல்கா, லக்னோ, அமிருதசரஸ், கான்பூர், அஜ்மீர், போபால் மற்றும் டேராடூன் சதாப்தி ரயில்களில் முதல்கட்டமாக இந்த வசதி வர உள்ளது. இம்மாதம் 29ம்தேதிக்குள் இத்திட்டம் இறுதிவடிவம் பெறும் என்று ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பெங்களூரில் இருந்து சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கப்படும் வோல்வோ பஸ்களில் இதுபோன்ற வசதி உள்ளது. ரயிலில் இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.