காஷ்மீரில் ஆட்சியமைக்கப் போவது யார்? குழப்பம் நீடிப்பு! பி.டி.பி, பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.), பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றுக்கு மாநில ஆளுநர் வோரா அழைப்பு விடுத்துள்ளார்.
87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தலில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான 44 இடங்களைப் பெறவில்லை.
28 உறுப்பினர்களுடன் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), 25 உறுப்பினர்களுடன் பா.ஜ.க.வும் வென்றன. தேசிய மாநாட்டுக் கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களைக் கைப்பற்றின.
Looks like PDP is playing mind games with the BJP leaking about a letter of NC support that doesn't exist. Only a verbal offer conveyed.
— Omar Abdullah (@abdullah_omar) December 26, 2014
பி.டிபி.யும், பா.ஜ.க.வும் திரைமறைவில் ஆட்சி அமைப்பதற்கான ரகசிய பேச்சுகளை மும்முரமாக நடத்தி வருகின்றன. இந்த நிலையில் பி.டி.பி. தலைவர் முஃப்தி முகமது சயீத், பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஜுகல் கிஷோர் ஆகியோருக்கு தனித்தனியே, மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை நடத்த வருமாறு ஆளுநர் வோரா அழைப்பு அனுப்பியதாக கூறப்படுகிறது.
மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக பி.டி.பி-க்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று தேசிய மாநாட்டுக் கட்சியும், 12 பேரைக் கொண்ட காங்கிரஸூம் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த ஆதரவை ஏற்பது குறித்தும் பி.டி.பி. எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.
பா.ஜ.க.வுக்கும், தமது கட்சிக்கும் எந்தப் பேச்சும் நடக்கவில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா ஏற்கெனவே அறிவித்துள்ளார். மேலும், அவர் ட்விட்டரில், பி.டி.பி.க்கு எங்களது ஆதரவை வாய்மொழியாகத்தான் தெரிவித்துள்ளோம். ஆனால், நாங்கள் ஆதரவுக் கடிதம் அளித்திருப்பதாக தெரிவித்து, பா.ஜ.க. மனதில் உள்ளதை அறிவதற்காக பி.டி.பி விளையாடுகிறது. ஆனால் அதுபோல் எந்தக் கடிதமும் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆட்சியமைக்கும் விவகாரத்தில் மாநிலக் கட்சிகளை ஓரங்கட்டும் பா.ஜ.க.வின் செயலானது மாநில மக்களுக்கு எதிரானது என்றார்.