சிலர் நாட்டை கொள்ளையடிக்க நினைத்தனர்.. நாங்கள் சேவை செய்கிறோம்: லோக்சபாவில் மோடி ஆவேசம்
டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசியிருந்தனர். உறுப்பினர்களின் உரைக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று நன்றி தெரிவிப்பு தீர்மானத்தின் மீது லோக்சபாவில் பேசினார்.
அப்போது காங்கிரசை மோடி கடுமையாக சாடினார். அவர் கூறியதாவது: தேசத்தை கொள்ளையடிக்க சிலர் நினைத்தார்கள், நாங்கள் சேவை செய்து வளர்க்க நினைக்கிறோம்
நேர்மை என்ற சகாப்தத்தில் இந்தியா பயணிக்கிறது. ஜி.எஸ்.டி வரியை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என எதிர் கட்சிகள் நினைத்தன.
ஏழைகள் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்கும் நிலை பார்க்கும் போது மகிழ்கிறேன். ஜன் தன் யோஜனாதான் இதை நனவாக்கியுள்ளது
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் மத்திய அரசின் 2022 இலக்கு திட்டத்தை பார்த்து காங்கிரஸ் அஞ்சுகிறது. இந்தியாவின் நடுத்தர வர்க்கம் தரமான கல்வி, இருப்பிடம், வாழும் சூழலை எதிர்பார்க்கிறது. அதனை நிறைவேற்றும் அரசாக மத்திய அரசு உள்ளது. நடுத்தர வர்க்கத்திற்கு பறப்பதற்கான சிறகுகளை நாங்கள் கொடுத்துள்ளோம்.
இந்திய இளைஞர்கள் எதையாவது சாதிக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு வழி அமைத்து கொடுக்கும் அரசாக நாங்கள் இருக்கிறோம். மத்திய அரசு மக்களுக்கான திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவரை தேர்தெடுப்பதில் நடப்பது தேர்தலா? அல்ல முடிசூட்டு விழாவா? பாஜகவிடம் காங்கிரஸ் ஜனநாயகத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.