உங்க கிட்ட கருப்புப் பணம் இருக்கா.. அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க.. ஜேட்லி
டெல்லி: கருப்புப் பணத்தை ஒழிக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசின் நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது குறித்து அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதே அரசு நடவடிக்கையின் நோக்கம் என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நவம்பர் 8 நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்" என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை அஞ்சலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ அடையாள ஆவணத்துடன் சென்று மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
அருண் ஜெட்லி விளக்கம்
வங்கிகளில் பணத்தை மாற்றிக் கொள்வது தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறாக டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி விலக்கு கிடைத்துவிடாது. அந்தப் பணத்துக்கான ஆதாரம் என்னவென்பதை பொருத்து நாட்டின் வரிவிதிப்புச் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கவலை வேண்டாம்
நீங்கள் வங்கியில் டெபாசிட் செய்யும் பணம் நேர்மையான வழியில் சம்பாதிக்கப்பட்டதாகவோ அல்லது சேமித்து வைக்கப்பட்டதாகவோ இருந்து அதற்கான கணக்குகள் சரியாக இருந்தால் நீங்கள் எவ்வித கவலையும் கொள்ளத் தேவையில்லை. அதேவேளையில், கணக்கில்வராத பெருந்தொகையாக இருந்தால் சிக்கலே.
டெபாசிட் செய்யலாம்
விவசாயிகளின் சேமிப்புக்கோ, இல்லத்தரசிகள் சேமிப்புக்கோ எவ்வித பாதிப்பும் இருக்காது. ரூ.25,000, ரூ.30,000, ரூ.50,000 போன்ற மக்களின் சிறு சேமிப்புகளை எளிதில் வங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
யாருக்கு பாதிப்பு
அரசின் நடவடிக்கையால் கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள், லஞ்சப் பணத்தை சேர்த்து வைத்திருந்தவர்களே பாதிக்கப்படுவர். இனி மக்கள் தங்கள் வருமானத்தை கணக்கில் காட்டுவர் ஒழுங்காக வரி செலுத்துவர். இந்தியா இனி வரி செலுத்துவதில் அக்கறை கொண்ட மக்களுடைய நாடாக மாற்றம் பெறும். இது, இனிவருங்காலங்களில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் முயற்சியும்கூட.
கறுப்பு பணம்
அரசின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அரசின் நடவடிக்கையால் மக்களுக்கு சிற்சில சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். ஆனால், கருப்புப் பணத்துடன் வாழ்வதைக் காட்டிலும் இந்த சிரமத்தை சில காலம் பொறுத்துக் கொள்வது நல்லதே. அரசின் இந்த நடவடிக்கைக்குக் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டும் என்று கூறியுள்ள ஜெட்லி நேரடி, மறைமுக வரி வசூல் அதிகரிக்கும் என்றார்.