தூங்கிய பைலட்.. பொறுப்பில்லாத பெண் துணை பைலட்- பாதை விலகி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்
டெல்லி: மும்பையில் இருந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் பைலட் தூங்கியதால், அந்த விமானம் வானில் தனக்குத் தரப்பட்ட பாதையை விட்டு 5,000 அடி கீழே பறந்தது. அந்தப் பாதையில் வேறு ஏதாவது விமானம் வந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும்.
இந்த சம்பவம் நடந்தபோது விமானத்தின் துணை பைலட்டான பெண், விமானம் குறித்த தகவல்கள் அடங்கிய electronic flight bag (EFB) எனப்படும் டேப்லட்டை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதும், விமானம் உயரம் குறைந்து பறப்பதை அவர் கவனிக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
துருக்கி மீது பறந்தபோது...
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் இப்போது தான் வெளியே தெரியவந்துள்ளது.
துருக்கி தலைநகர் அங்காரா மீது பறந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
போயிங் B-777-300 ரகத்தைச் சேர்ந்த அந்த ஜெட் ஏர்வேஸ் 9W-228 விமானத்தை 34,000 அடி உயரத்தில் பறக்குமாறு அங்காரா தரைக்கட்டுப்பாட்டு நிலையம் கூறியது. ஆனால், அப்போது ஆட்டே-பைலட்டை இயக்கிவிட்டு விமானத்தின் கேப்டன் தூங்கிக் கொண்டிருந்தார்.
பைலட் தூங்க, பெண் பைலட் டேப்லட் பார்க்க...
நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களில் ஆட்டோ பைலட் இயங்குகையில், விமானிகளில் ஒருவர் தூங்கவும் மற்றொருவர் விமானத்தின் செயல்பாட்டை கண்காணிப்பதும் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான்.
ஆனால், இந்த விமானத்தின் கமாண்டரான பைலட் தூங்கிக் கொண்டிருக்க, உடனிருந்த பெண் துணை பைலட் விமானத்தின் காக்பிட்டில் இருக்கும் டேப்லட்டில் விமானம் குறித்த தகவல்களை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த விமானம் 5,000 அடி கீழே பறக்க ஆரம்பித்துள்ளது.
எச்சரித்த அங்காரா தரைக்கட்டுப்பாட்டு நிலையம்...
வழக்கமாக இரு விமானங்களுக்கு இடையே 1,000 அடி உயர இடைவெளி மற்ற விமானங்கள் இயக்கப்படும். ஜெட் ஏர்வேஸ் தவறாகப் பறந்த உயரத்தில் ஏற்கனவே இன்னொரு விமானம் பறக்க ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நேரத்தில் அந்த விமானம் எதிரே வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் தனக்கு ஒதுக்கப்பட்ட 34,000 அடி உயரத்தை விட்டுவிட்டு 5,000 அடி குறைவாகப் பறந்ததை கண்காணித்த அங்காரா தரைக்கட்டுப்பாட்டு மையத்தினர், உடனடியாக விமானத்தைத் தொடர்பு கொண்டு விமானம் உயரம் குறைவாகப் பறப்பது குறித்து எச்சரித்தனர். உடனடியாக 32,000 அடி உயரத்தை எட்டுமாறு உத்தரவிட்டனர்.
விமானியை அவசரமாக எழுப்பி...
இதையடுத்து விமானியை எழுப்பிய துணை விமானி இந்த எச்சரிக்கையை சொல்ல, அவர் உடனடியாக செயல்பட்டு விமானத்தின் உயரத்தை அதிகரித்துள்ளார்.
ஆனால், இந்த சம்பவத்தை துணை பெண் விமானியோ அல்லது தூங்கிய விமானியோ ஜெட் ஏர்வேஸ் அதிகாரிகளிடமோ அல்லது இந்திய விமானக் கட்டுப்பாட்டுத்துறையிடமோ தெரிவிக்கவே இல்லை. அதே போல இதை துருக்கி விமானக் கட்டுப்பாட்டுறையும் இந்தியாவிடம் தெரிவிக்கவில்லை.
வந்தது மர்ம எஸ்எம்எஸ்...
ஆனால், இந்திய விமானப் போக்குவரத்துத்துறையின் இணை டைரக்டர் ஜெனரலான லலித் குப்தாவுக்கு இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஒரு மர்ம எஸ்எம்எஸ் வந்தது. அதில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெட் ஏர்வேஸ் விமானம் தனது பாதையை விட்டு விலகி குறைந்த உயரத்தில் பறந்ததபம், பெரும் விபத்தில் இருந்து தப்பிய விவரமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தரையிறக்கப்பட்ட விமானிகள்...
இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு குப்தா, விமானியையும் துணை விமானியையும் அழைத்து விசாரித்தார். அப்போது நடந்த சம்பவத்தை இருவரும் ஒப்புக் கொண்டனர். இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட குப்தா, விசாரணை முடியும் வரை இரு விமானிகளும் விமானங்களை இயக்க தடையும் விதித்து உத்தரவிட்டார்.
விசாரணையில், பெண் பைலட் விமானத்தில் இருக்கும் டேப்லட்டை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அந்த டேப்லட் விமானம் குறித்த தகவல்களை அடக்கியதாகும் என்றும் ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது.
உயரம் ஏன் குறைந்தது?...
ஆனால், ஆட்டோ பைலட் அமலில் இருந்தோது விமானம் ஏன் 5,000 அடி உயரம் குறைய ஆரம்பித்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. தன்னை அறியாமல் துணை விமானியோ அல்லது தூக்கத்தில் இருந்த விமானியோ பட்டன்களை அழுத்தியதால் உயரம் குறைய ஆரம்பித்ததா, ஆட்டோ பைலட்டில் ஏதாவது குறை இருந்ததா என்ற விசாரணையும் நடக்கிறது.
துணை பைலட்டும் தூங்கினாரா?:
மேலும் டேப்லட்டை பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட விமானம் உயரம் குறைவதை துணை பைலட்டால் உடனடியாக உணர முடிந்திருக்கும். ஆனாலும் அவர் ஏன் அதை உணரவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் அவர் டேப்லட்டை பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறுவது உண்மையா அல்லது அவரும் தூங்கினாரா என்றரீதியிலும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் ஜெட் ஏர்வேஸ் தனது பைலட்டுக்களுக்கு தரும் பயிற்சிகள் குறித்தும் ஆய்வு செய்யப் போவதாக விமானக் கட்டுப்பாட்டுத்துறை கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஏன் இருவரும் உரிய விவரத்தை தாக்கல் செய்யவில்லை, ஏன் மறைத்தனர் என்ற கேள்விகளையும் துணை எழுப்பியுள்ளது.
கடும் நெரிசலில் துருக்கி வான்வெளி...
சம்பவம் நடந்த பின்னரும் அடுத்தடுத்து மேலும் விமானங்களை இயக்கியவண்ணம் இருந்த இவர்களை செவ்வாய்க்கிழமை தான் விமானங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டது.
மர்ம எஸ்எம்எஸ் வந்திருக்காவிட்டால் இந்த விவரமே வெளியில் தெரியாமல் போயிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் போராளிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்தும் இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டு வருவதாலும் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருவதையடுத்தும் இந்த நாடுகளின் வான் எல்லைகளை எல்லா விமான நிறுவனங்களும் தவிர்த்து வருகின்றன. இதனால் துருக்கி மீதே பெரும்பாலான விமானங்கள் பறக்கின்றன. இதன் காரணமாக துருக்கி வான் பகுதி பெரும் 'நெரிசலில்' உள்ள நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானிகள் பொறுப்பில்லாமல் நடந்துள்ளனர்.