ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்
ஐஐடி மாணவர் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்: ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு திடீரென தடை விதித்துள்ள சம்பவம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில், மாட்டு இறைச்சி உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த சென்னை ஐஐடி மாணவர் சூரஜ், நேற்று திடீரென்று சக மாணவர்களால் தாக்கப்பட்டார்.இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் மாணவர் சூரஜ்ஜின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, கோட்டூர்புரம் போலீசார் மாணவர் சூரஜ்ஜிடம் விசாரணை நடத்தினார்கள். அவரது வாக்குமூலம் புகாராக பதிவு செய்யப்பட்டது. சூரஜை தாக்கிய தாக 8 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டர் பதிவில், தாக்கப்பட்ட மாணவர் சூரஜ் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். மாணவர் சூரஜ் மீதான தாக்குதல் சகிப்பின்மையை காட்டுகிறது. உணவை தேர்வு செய்துகொள்ளும் உரிமையை அரசியல் சாசனம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.