வெள்ளம் பாதித்த பீகாருக்கு ரூ.500 கோடி நிவாரணம்.. சேதங்களை பார்வையிட்ட பிரதமர் அறிவிப்பு!
பீஹார் மாநிலத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.500 கோடியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பாட்னா: பீஹாரில் கடும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி விமானம் மூலம் பார்வையிட்டார்.
பீஹாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று விமானத்தில் சென்று பார்வையிட்டார். இதற்காக இன்று காலை புர்னியா சென்ற பிரதமர் அங்கு மூத்த அதிகாரிகள், முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில் மோடி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
ஐக்கிய ஜனதா தளக் கட்சி பாரதிய ஜனதாவுடன் இணைந்த பிறகு பிரதமர் பீஹாருக்கு மேற்கொண்ட முதல் சுற்றுப் பயணம் இது. விமானத்தில் இருந்து வெள்ள சேதத்தை பார்வையிட்ட பிரதமருடன் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில் மோடி உள்ளிட்டோரும் இருந்தானர்.
பீஹார் மாநிலத்தின் 19 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1 கோடியே 67 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். முசாஃபர்பூர், தர்பங்கா, சமஷ்திபுர் மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
PM @narendramodi undertook an aerial survey to take stock of the situation arising due to the floods in Bihar. pic.twitter.com/fl6ti3IWTO
— PMO India (@PMOIndia) August 26, 2017
பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களை தங்க வைக்கும் முகாம்களின் எண்ணிக்கை 368ல் இருந்து 624ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி பீஹார் மாநிலத்திற்கு உடனடி நிவாரணமாக ரூ. 500 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் நிவாரணப் பணியில் மாநில அரசுடன் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்த பிரதமர், வெள்ளச் சேதங்களை மதிப்பிட மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.