காஷ்மீர் விவகாரம்.. பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க அங்குள்ள அரசியல் கட்சிகளுடன் பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவுள்ளதாகப் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் வகையிலிருந்த சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து காஷமீர் மாநிலத்தில் ஓர் ஆண்டிற்கும் மேலாக எந்தவொரு அரசியல் செயல்பாடும் இல்லாமல் இருக்கிறது.

Array
கடைசியாக அங்கு கடந்த 2018ஆம் ஆண்டு மெஹபூபா முப்தி தலைமையில் அரசு அமைந்திருந்தது. அவரது ஆட்சி 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவுக்கு வந்ததது. மேலும், அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அப்போது மக்களவை தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டது.

அனைத்துக் கட்சி கூட்டம்
அதன் பின்னரே ஜம்மு காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப் பிரதமர் மோடி அடுத்த வாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், காஷ்மீரில் மீண்டும் ஜனநாயக அமைப்புகள் ஏற்படும் முயற்சியில் அரசு ஈடுபடத் தொடங்கியுள்ளது.

டெல்லியில் நடைபெறும்
இது குறித்து அங்குள்ள அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்யவே ஏற்பாடு நடைபெற்று வருகிறது. காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் அடுத்த வாரம் டெல்லியில் மோடியை சந்திக்கவுள்ளனர். அதைத் தொடர்ந்து சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்" என்றார். இதில் எந்தெந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மீண்டும் மாநில அந்தஸ்து?
காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது, சட்டசபைத் தேர்தலை விரைவில் நடத்துவது ஆகியவை குறித்து இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அங்குள்ள பெரும்பாலான முக்கிய கட்சிகள் தயாராகவே உள்ளன. மேலும், அங்கு மீண்டும் சட்டசபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னரே தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள டிலிமிட்டேஷன் கமிஷனின் நடவடிக்கைகளிலும் காஷ்மீர் கட்சிகள் பங்கேற்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உள் துறை அமைச்சர் அமித் ஷா
முன்னதாக, அனைத்து கட்சி கூட்டம் குறித்து ஆலோசிக்க நேற்று உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications