காசி - தமிழ்நாடு பிணைப்பு இன்று நேற்று வந்ததல்ல.. அப்டேட் செய்திருக்கிறார் மோடி.. தமிழிசை பேச்சு!
வாரணாசி : காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பிணைப்பு இன்று, நேற்று அல்ல காலங்காலமாக இருந்து வருவது, இந்த இணைப்பை பிரதமர் தற்போது புதுப்பித்து இருக்கிறார் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றார். தமிழகம், புதுச்சேரி தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு தமிழிசை தலைமை தாங்கினார்.
காசியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை, இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்.. . தமிழ்நாட்டுக்கும் ஆபத்தா? அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
காசி தமிழ் சங்கமம்
மத்திய அரசு ஏற்பாட்டில் காசியில் நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஆளுநர் தமிழிசை தலைமை தாங்கினார்.
பிரதமர் மோடி
காசியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், "தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு வருகை தந்து வணக்கம் சொல்லும் வாய்ப்பை அளித்த பிரதமருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். தமிழகத்தில் யாத்திரை செய்யும் எல்லோரும் காசி - ராமேசுவரம் என்ற சொற்றொடரை பயன்படுத்துவது மிகவும் பிரபலமானது. ராமேசுவரத்திற்கு சென்ற பின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற இணைப்பை, கலாசார, ஆன்மிக பிணைப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தி தந்து இருக்கிறார்.
காசி - தமிழ்நாடு பிணைப்பு
காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பிணைப்பு இன்று, நேற்றல்ல காலம் காலமாக இருந்து வருவது ஆகும். இந்த இணைப்பை பிரதமர் தற்போது புதுப்பித்துத் தந்து இருக்கிறார். இங்கு நடைபெறும் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் போன்ற கலாசார நிகழ்வுகளை பார்க்கும்போது கலை வடிவிலும்கூட தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் பிணைப்பு இருப்பது தெரிய வருகிறது.
மிகப்பெரிய வாய்ப்பு
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைத்து இருக்கிறார் பிரதமர் மோடி. கங்கையை தூய்மைப்படுத்த தமக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்களின் விற்பனையின் மூலம் பெறப்படும் தொகையை செலவிடுகிறார் பிரதமர் மோடி. இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது. மகாகவி பாரதியின் பேரனை காசியில் சந்தித்தேன். காசி தமிழ் சங்கமம் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.