பாகிஸ்தானுக்கு ஓடச் சொன்ன கிரிராஜ்சிங் தலைமறைவு- முன்ஜாமீன் கோரி கோர்ட்டில் மனு!!
பாட்னா: நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிப் போக வேண்டும் என்று சொன்ன பாஜக மூத்த தலைவர் கிரிராஜ்சிங்கை கைது நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவாகிவிட்டார். மேலும் தமக்கு முன்ஜாமீன் கோரி பாட்னா நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் அவர் பிரதமரானவுடன் பாகிஸ்தானுக்குத்தான் போக வேண்டும்.. அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்று பாஜக மூத்த தலைவரும் பீகார் முன்னாள் அமைச்சருமான கிரிராஜ்சிங் பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. பாரதிய ஜனதா தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரை கைது செய்யவும் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மேலும் கிரிராஜ்சிங் பிரசாரம் மேற்கொள்ளவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கிரிராஜ்சிங்கை கைது செய்ய ஜார்க்கண்ட் மாநில போலீசார் மும்முரமாக தேடி வருகின்றனர். இன்று அவரது வீட்டில் சல்லடை போட்டு போலீசார் தேடினர். அவரது குடும்பத்தினரிடம் கிரிராஜ்சிங்கின் இருப்பிடம் குறித்து துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தினர்.
தலைமறைவு
ஆனால் கிரிராஜ்சிங்கின் இருப்பிடம் பற்றி போலீசாருக்கு தகவல் கிடைக்கவில்லை. தற்போது தலைமறைவாகிவிட்ட அவரை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்பதில் போலீசார் மும்முரமாக தேடி வருகின்றனர்.
முன்ஜாமீன் கோரி மனு
இதனிடையே கிரிராஜ்சிங் தான் கைது செய்யப்படாமல் பாட்னா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை பாட்னா நீதிமன்றம் நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ள இருக்கிறது.












Click it and Unblock the Notifications