பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜெயலலிதா வழக்கு... அரசியல் கட்சிகளின் பீதியும் ஆர்வமும்....
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது இன்று வழங்கப்பட இருக்கும் தீர்ப்பு தமிழக அரசியலில் மட்டும் இன்றி தேசிய அரசியலிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்க கூடிய அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்புடைய வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தீர்ப்பில் தான் அ.தி.மு.க. எதிர்காலம்
சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.கவின் எதிர்காலமும் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கிறது.
உன்னிப்பாக கவனிக்கும தி.மு.க.
சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தது மட்டும் இன்றி உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்தித்த தி.மு.கவும் ஜெயலலிதா வழக்கில் இன்று வெளியாக இருக்கும் தீர்ப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பா.ஜ.க. வும் புது வியூகம்
தமிழகத்தில் பலமாக காலூன்றும் திட்டத்துடன் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் இன்றைய தீர்ப்பின் அடிப்படையில் தான் சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை வகுக்கும் என்று கூறப்படுகிறது.