ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு! ரூட்டை மாற்றி பேசிய மம்தா! என்னாச்சி?
கொல்கத்தா: ‛‛மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் மாற்றத்துக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடி வகுப்பை சேர்ந்த ஒருவரை நிறுத்துவதாக பாஜக முன்கூட்டியே கூறியிருந்தால் அதுபற்றி எதிர்க்கட்சிகளுடன் விவாதித்து இருக்கலாம்'' என மம்தா பானர்ஜி கூறினார்.
இந்திய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ல் முடிவுக்கு வருகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18 ல் நடைபெற உள்ளது.
நாங்க இந்துக்கள் அல்ல.. எங்கள் மதம் சர்னா! திரௌபதி முர்மு சார்ந்த.. 5 மாநில பழங்குடியினர் போராட்டம்!
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி முடிந்துள்ளது.
யஷ்வந்த் சின்ஹா
எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிறகு ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் கால்பதித்தார். பாஜகவில் இணைந்து செயல்பட்டார். பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றினார். பிறகு அவர் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.
திரெளபதி முர்மு
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களமிறங்கி உள்ளார். இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். இவர் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார். இவர் பாஜகவில் அரசியல் பிரவேசம் செய்து கவுன்சிலர் முதல் மாநில அமைச்சர் வரை பதவி வகித்தார். அதன்பிறகு ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார்.
ஆதரவு கோரும் வேட்பாளர்கள்
ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில் இருவரின் மனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இருவரும் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். நேற்று தமிழகம் வந்த யஷ்வந்த் சின்ஹா திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். கொல்கத்தாவில் ரதயாத்திரையை துவக்கி வைத்த பிறகு மம்தா பானர்ஜி பேசியதாவது: ‛‛தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறிப்பாக மகாராஷ்டிராவில் நடந்த சம்பவத்துக்குபிறகு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
முன்கூட்டியே கூறியிருக்கலாம்
பழங்குடியினர் மீது எங்களுக்கும் நல்ல உணர்வுகள் உள்ளன. பழங்குடி வகுப்பை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த போகிறோம் என பாஜக முன்பே கூறியிருந்தால் அதுபற்றி எதிர்க்கட்சிகளுடன் அமர்ந்து விவாதித்து இருக்கலாம். ஆனால் பாஜக எங்களிடம் பரிந்துரைகளை மட்டுமே கேட்டது.
மக்கள் நலனை அறிந்து..
மக்கள் நலனை அறிந்து செயல்படும் நபர் ஜனாதிபதி வேட்பாளராக இருந்தால் அது நாட்டுக்கு நன்றாக இருந்திருக்கும். தற்போது 17 எதிர்க்கட்சிகள் இணைந்து முடிவு செய்து எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இனி எதுவும் செய்ய முடியாது'' என்றார்.
ஆர்வமாக இருந்த மம்தா பானர்ஜி
எதிர்க்கட்சிகள் சார்பில் பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த மம்தா பானர்ஜி தான் அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் எழுதினார். இவர் தலைமையில் டெல்லியில் கடந்த மாதம் ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற 2வது கூட்டத்தில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசியுள்ளார்.