சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு சிறையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!
சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அதிகாரிகள திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பெங்களூரு: சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அதிகாரிகள் அடுத்தடுத்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் ரூ.2 கோடி வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதற்கு டிஜிபி சத்திய நாராயணராவ் மறுப்பு தெரிவித்தார்.
இந்த சம்பவம் காரணமாக சத்திய நாராயணராவ், ரூபா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சிறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதன்படி வினய்குமார் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளார்.
டிஜிபி ஆய்வு
இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அவர் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
சிறையில் தவறு நடக்கக் கூடாது
அப்போது, சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவது என்ற புகாரின்பேரில் விசாரணை அதிகாரிகள் ஆய்வுக்கு வரக் கூடும் என்பதால் எந்த தவறுகளும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறையில் இயங்காமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்ய வேண்டும் என அவர் கிருஷ்ணகுமாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆய்வின்போது, சில முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
டிஐஜி ரூபாவும் ஆய்வு
இதைத் தொடர்ந்து டிஐஜி ரூபாவும் சிறைக்கு வந்தார். அப்போது சிறை ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் அவரை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ரூபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, சிறையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று டிஐஜி ரூபா ஆய்வு செய்தார்.
கைதிகள் கோஷம்
ஆய்வின்போது சிறையில் உள்ள கைதிகள் அவருக்கு எதிராகவும், சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினராம். சிறையில் சிறிது நேரம் இருந்துவிட்டு ரூபா புறப்பட்டு சென்று விட்டார்.
போட்டி ஆய்வு
டிஜிபி சத்திய நாராயணராவ் சிறைக்கு வந்து விட்டு சென்றதால், முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக டிஐஜி ரூபா சிறைக்கு வந்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு ஆதாரங்கள் அழிக்கப்பட்டு இருந்தால், அதுபற்றி விசாரணை அதிகாரி வினய்குமாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்பதற்காக டிஐஜி ரூபா சிறைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
கண்காணிப்பு கேமராக்கள்
சிறைத்துறை ஏஐஜி வீரபத்ரசாமி பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று நேற்றுமுன் தினம் காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஆய்வு செய்த தகவல் வெளியாகி உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் நன்றாக இயங்குகிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்துள்ளார். அதில் பல்வேறு கண்காணிப்பு கேமராக்கள் இயங்காமல் இருப்பது தெரியவந்தது.
Recommended Video
தொழில்நுட்ப பிரிவினரும் ஆய்வு
இது தொடர்பாக மாநில காவல் துறை தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் 7 பேர் கொண்ட தொழில்நுட்ப பிரிவினர் வந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதோடு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
சிறையில் பரபரப்பு
இந்த சிறையில் மொத்தம் 4,500 கைதிகள் உள்ளனர். சிறையில் மொத்தம் 126 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறையில் அதிகாரிகள் மட்டுமின்றி தொழில்நுட்பப் பிரிவினரும் ஆய்வு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.