பிரியங்கா காந்தி ஒரு காகித புலி: வெற்றி பெருமிதத்தில் ஸ்மிருதி இரானி நக்கல்
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி ஒரு காகித புலி என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கிண்டல் செய்துள்ளார்
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ள நிலையில் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி ஒரு காகித புலி என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கிண்டல் செய்துள்ளார்.
மாநில சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் சமாஜவாதி- காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ், பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.
இதில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாக்கப்பட்ட பாஜக தனித்து போட்டியிட்டு 320-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி வெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பிரியங்கா காந்தியும் அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் சிலர் பிரியங்கா காந்தியிடம் வலியுறுத்தினர்.
எனினும் சமாஜவாதி- காங்கிரஸ் கூட்டணிக்காக பிரியங்கா காந்தியின் பிரசாரம் எந்தவிதத்திலும் எடுபடவில்லை என்பது தற்போது தெரிகிறது. நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா, சொற்ப அளவிலான தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டார்.
அந்த பொதுக் கூட்டங்களிலெல்லாம் மோடியை அவர் விமர்சித்தே பேசியிருந்தார். தற்போது அவர் ஒரு காகித புலி என்பது தெரிகிறது. ஜாதி, மதம், மொழி, இனம் ஆகிய தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது என்றால் அதற்கு பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரின் கடின உழைப்பே காரணம் என்றார் ஸ்மிருதி இரானி.