திமுக அரசு பாணியில் உ.பி பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்...பிரியங்கா காந்தியின் அதிரடி வாக்குறுதி!
கோரக்பூர்: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்; விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அதிரடியாக வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வென்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற நாளில் கையெழுத்திட்ட கோப்புகளில் முக்கியமான ஒன்று அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை என்பதுதான்.
அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டார் மு.க.ஸ்டாலின். இன்றளவும் இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது ஏழை, எளிய குடும்ப பெண்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

உ.பி. தேர்தல் களத்தில் பிரியங்கா
இத்திட்டத்தை உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அமல்படுத்துவோம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள் கூட கிடைக்காது என கருத்து கணிப்புகள் கூறினாலும் அதனை முறியடித்து கவுரவமான இடங்களைப் பெறுவதற்காக பிரியங்கா காந்தி களமிறங்கி தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

கோரக்பூரில் பிரியங்கா
உ.பி.யில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளை ஒவ்வொரு பிரச்சனையின் போதும் சமமாக சாடி விமர்சித்து வருகிறார். உ.பி.யின் லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட போதும் லலித்பூரில் உரம் வாங்குவதற்கு காத்திருந்த போது விவசாயிகள் மாண்டு போன போதும் களத்தில் நின்று போராடியவர் பிரியங்கா காந்தி. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டை எனப்படுகிற கோரக்பூரில் நேற்று பிரியங்கா தீவிர சுற்று பயணம் மேற்கொண்டார். தமது வாகனத்தின் கதவுகளை பிடித்து தொங்கியபடியே தொண்டர்களை பார்த்து உற்சாகமாக வணக்கம் செலுத்தி அசத்தினார் பிரியங்கா,

விவசாயிகள் மரணங்கள்
பின்னர் கோரக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது: மாநில முதல்வராக பதவியேற்ற பின்னர் கோரக்பூரை முதல்வர் யோகி ஆதித்யநாத் மறந்துவிட்டார். கொரோனா பரவல் காலத்தில் ஆறுகளில் மக்கள் நூற்றுக்கணக்கான சடலங்கள் வீசி எறியப்பட்டதை யாரும் மறந்துவிட முடியாது. அந்த அளவுக்கு ஆளும் பாஜக அரசின் சுகாதாரத்துறை மிக மோசமான நிலையில் இருக்கிறது. தேர்தல் வந்துவிட்ட காரணத்தால் இப்போது அதை செய்தோம்.. இதை செய்தோம் என பட்டியல் போடப் பார்க்கிறது பாஜக அரசு. நாட்டிலேயே இந்த மாநிலத்தில்தான் உரம் வாங்க காத்திருந்து விவசாயிகள் செத்து மடிந்து போயுள்ளனர். லலித்பூரில் அந்த விவசாயிகளின் வீடுகளைச் சென்று பார்வையிட்டேன். அவர்களிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை...ரூ3-4 லட்சம் கடன்களைத் தவிர.. உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் விவசாயிகள் இப்படிப்பட்ட நிலையில்தான் இருக்கின்றனர் என்பதை நான் ஒவ்வொரு முறையும் பார்த்து வருகிறேன். கடந்த நான்கரை ஆண்டுகாலம் பாஜக அரசு என்னதான் செய்தது?

அத்தனையும் விற்றது பாஜக அரசு
பாஜகவை எதிர்த்து களத்தில் நின்று போராடுவது யார்? சமாஜ்வாதி கட்சியா? பகுஜன் சமாஜ் கட்சியா? இல்லை காங்கிரஸ் கட்சிதான் இந்த மாநில மக்களுக்காக களத்தில் நின்று போராடி வருகிறது. இந்த நாட்டில் காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகாலத்தில் ரயில், சாலைகள், விமான நிறுவனங்களை உருவாக்கி வைத்தது. ஆனால் 7 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அத்தனையையும் விற்பனை செய்துவிட்டது. இந்த நாட்டின் இளைஞர்கள் இன்று வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 5 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் வேலை கிடைக்காமல் நாள்தோறும் 3 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். உ.பி.யில் ஆளும் பாஜக அரசில் ஏழைகளுக்கு வேலை கிடைக்காது.. அந்த அளவுக்கு ஊழல் புரையோடிப் போய்கிடக்கிறது. லக்கிம்பூரில் விவசாயிகளை படுகொலை செய்த குற்றவாளியின் தந்தையான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரே மேடையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்
பாஜக ஆட்சியில் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், பிராமணர்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மீன்பிடி தொழிலுக்கு வேளாண் அந்தஸ்து வழங்குவோம். அரிசி, கோதுமை, கரும்புக்கு நியாயமான கொள்முதல் விலையை வழங்குவோம். பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம். ரூ10 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications