நுபுர் சர்மாவுக்கு எதிராக வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்.. ஜூன் 16 இருக்கு - கொந்தளித்த முஸ்லீம்கள்
டாக்கா: வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் இன்று ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்று, பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
நபிகள் நாயகம் குறித்து பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை கண்டித்து நாடு தழுவிய அளவில் இன்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.
நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கைது செய்யக் கோரியும் வங்கதேச தலைநகர் டாக்காவில் இன்று ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பேரணி நடத்தினர்.
நுபுர் சர்மா
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவின் நபிகள் நாயகம் குறித்த கருத்துக்கள் சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியது. பல இஸ்லாமிய நாடுகள் அவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பாரதிய ஜனதா கட்சி அவரை கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்தது.
நாடு முழுவதும் போராட்டம்
இருப்பினும் நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் டெல்லி ஜமா மஸ்ஜித் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தில்
நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச தலைநகர் டாக்காவில் இன்று ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு டாக்கா நகரின் முக்கியமான மசூதியான பைத்துல் முகரம் மசூதிக்கு அருகே நூற்றுக்கணக்கானோர் தெருக்களில் நடந்து, இந்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்திற்கு அழைப்பு
மேளும், ஜூன் 16 அன்று கெராவ் இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவும் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் இந்திய தயாரிப்புகளையும் இந்தியாவையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தனர். போராட்டத்தை முன்னிட்டு டாக்கா பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.