பஞ்சாப் நேஷனல் வங்கி மெகா முறைகேடு: முன்னாள் அதிகாரியை கைது செய்தது சிபிஐ
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மெகா முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட முன்னாள் வங்கி அதிகாரி கோகுல்நாத் ஷெட்டியை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video
டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11ஆயிரம் கோடி முறைகேடு செய்யப்பட்ட நிலையில் அதில் முக்கிய குற்றவாளி என கருதப்படும் முன்னாள் வங்கி அதிகாரி கோகுல்நாத் ஷெட்டியை சிபிஐ கைது செய்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக வங்கி நிர்வாகமே பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அறிக்கையில் அனுப்பியுள்ளது. இந்த மோசடி குறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடி மீது புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீரவ் மோடியின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர் சுவிட்சர்லாந்துக்கு ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டன.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த முறைகேட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் காலா கோண்டா கிளையின் முன்னாள் துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டிக்கு முக்கிய தொடர்பிருப்பதாக தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை கோகுல் நாத் ஷெட்டியை சிபிஐ கைது செய்தது.