ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களிடம் அமலாக்கப் பிரிவினர் தீவிர விசாரணை!
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும், அவரது சகோதரரும் சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறனிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் (Enforcement Directorate) விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், சன் குழுமத்தை சேர்ந்த உயர் அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2004-2007ம் ஆண்டு காலத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது வெளிநாட்டு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், சென்னையில் நடத்தி வந்த ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு கேட்டு 2006ம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதற்கு தயாநிதி மாறன் உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் ஏர்செல் நிறுவனப் பங்குகள் திடீரென மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறின.
பங்குகள் கைமாறியவுடன் ஏர்செல் நிறுவனத்துக்கு 14 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களை தயாநிதி மாறன் வழங்கினார். இதற்குப் பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் டிவி குழுமத்தின் "சன் டைரக்ட்' நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்தது, இந்த பணம் மொரீசியஸ் உள்ளிட்ட வெளிநாடுகள் வழியே சன் டைரக்ட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐயிடம் சிவசங்கரன் கொடுத்த வாக்குமூலத்தில், என்னை மிரட்டி ஏர்செல் பங்குகளை அனந்த கிருஷ்ணனுக்கு விற்க வைத்தார் தயாநிதி மாறன் என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக 72 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, 151 சாட்சியங்கள், 655 ஆதார கோப்புகள் ஆகியவை சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று மாறன் சகோதரர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த பண பரிவர்த்தனை குறித்து விசாரிக்கும் அமலாக்கத்துறை, மாறன் சகோதரர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்த விசாரணை கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி இப்போது வரை நடந்து வருகிறது. முதலில் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு சன் குழும நிறுவனங்களின் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணைகள் டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் நடக்கின்றன.
சன் குழும நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகள் குறித்து ஆவணங்களை அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள நிறுவனங்களின் வர்த்தகம் குறித்து மட்டுமே தற்போது விசாரணை நடக்கிறது. பின்னர் தேவைப்பட்டால், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன பரிவர்த்தனை குறித்தும் அமலாக்க துறை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.