ரஃபேல் போர் விமான விவகாரம்-விளக்க அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
ரஃபேல் போர் விமான விவகாரம் குறித்து விளக்க அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: ரஃபேல் போர் விமான விவகாரம் குறித்து விளக்க அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை மத்திய அரசு வாங்கியது. இதுதொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில் முறைகேடு நடந்துள்ளதால் ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் சர்மா, வினித் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 3 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது
சராசரி விலையைவிட கூடுதல் விலைக்கு ரஃபேல் போர் விமானம் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என மனுதாரர் எம்.எல்.சர்மா வாதிட்டார்.
வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
மேலும் ஒப்பந்தத்தில் ரஃபேல் நிறுவனம் இறுதி செய்யப்பட்டது எப்படி? என்றும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ரபேல் விமானங்களின் விலைகள் பற்றி நாங்கள் கேட்கவில்லை ஆனால் எதன் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்பட்டது என்பதை விளக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.