காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்ட் தான் ரகுராம் ராஜன்... சு.சுவாமி 'பொளேர்'
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்டாக செயல்படுகிறார் என பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நியமிக்கப்பட்டவர் ரகுராம் ராஜன். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது பல்வேறு செயலாளர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் ரகுராம் ராஜன் மாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்தார். இந்நிலையில் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதனிடையே ரகுராம் ராஜனுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநராக இராண்டாவது முறை வாய்ப்பு வழங்கக் கூடாது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி போர்க்கொடி தூக்கினார்.இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் 2-வது முறையாக நீடிக்க விரும்பவில்லை என ரகுராம் ராஜன் தன் பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும், அவருக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பாஜகவினர் ரகுராம் ராஜனை குறிவைத்துச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ் கட்சியின் ஒரு ஏஜண்டாக ரகுராம் ராஜன் செயல்படுகிறார் என்று விமர்சித்துள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், ரகுராம் ராஜன் வளர்ச்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல், அரசியல்வாதி போன்று செயல்பட்டதாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் உண்மையான அக்கறை செலுத்தவில்லை என்று சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மேலும், ரிசர்வ் பேங்க் ஆளுநராக இரண்டாவது முறையாக ரகுராம் ராஜனை நியமிக்கக்கூடாது. அவருக்கு அந்த தகுதி இல்லை. ரகுராம் ராஜன் பெயரளவுக்குதான் இந்தியர்; மனதளவில் அவர் ஓர் அமெரிக்கர். இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார் என குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.