காங்கிரசுக்கு 2ஜி, பாஜகவுக்கு ஜிஎஸ்டி.. தலைவர்கள் பரபர வார்த்தை போர்
ஜி.எஸ்.டி வரியை சில நாட்களுக்கு முன்பு கப்பார் சிங் வரி என்று ராகுல் விமர்சித்து இருந்தார்.
டெல்லி : காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளின் இடையே மீண்டும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. ராகுலைக் கொண்டு காங்கிரஸ் மீண்டும் பழைய எழுச்சியைப் பெற முயற்சித்து வருகிறது. இது பா.ஜ.க.,விற்கு தலைவலியாகி உள்ளது.
சமீபத்தில், குஜராத் மக்களிடையே ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பா.ஜ.க கொண்டுவந்திருக்கும் ஜி.எஸ்.டி வரியானது கப்பார் சிங் (கொள்ளையன்) வரி என்று அர்த்தப்படுத்தினார். மேலும் டிஜிட்டல் இந்தியா என்று சொல்லி மக்களின் கையில் பணம் இல்லாத நிலைக்கு கொண்டுவந்து விட்டார்கள் என்றும் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், 'ராகுலுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நாங்கள் மக்களின் நன்மைக்காக ஜி.எஸ்.டி கொண்டு வந்தோம். ஆனால், காங்கிரஸ் 2ஜி ஊழலையும், நிலக்கரி ஊழலையும் யார் நன்மைக்காக செய்தார்கள் என்று சொல்ல முடியுமா?' என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் போராட்டம்
மேலும், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக நவம்பர் 8ம் தேதி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு போராட்டம் தான். காரணம் டிஜிட்டல் இந்தியாவாகிவிட்டால் அவர்களால் முன்னைப் போல செயல்பட முடியாது அல்லவா? உண்மையில் இதை மக்கள் கொண்டாட வேண்டும்' என்றும் குறிப்பிட்டார்.
மக்கள் வரவேற்கிறார்கள்
‘ஜி.எஸ்.டி மூலம் நாடு முழுவதும் ஒரே வரி என்கிற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறது பா.ஜ.க. இதனால் நாடு முழுவதும் ஒரு பொதுச்சந்தை உருவாகி இருக்கிறது. முதலில் மக்கள் கொஞ்சம் சிரமப்பட்டாலும் தற்போது அதற்கு பழகிவிட்டார்கள்' என்றும் அவர் கூறி இருக்கிறார்.
ஜி.எஸ்.டி என்ன செய்தது ?
ஆனால், உண்மையில் ஜி.எஸ்.டி.,யால் மக்கள் அதிக அளவில் பாதித்து இருக்கிறார்கள். இன்னும் பொருளாதார மந்தநிலை சீராகவில்லை. பல சிறுகுறு வியாபாரிகள் தொழில் நஷ்டமடைந்து இருப்பதாக ஆதாரங்களோடு காங்கிரஸ் தெரிவிக்கிறது.
மீண்டு வருகிறது காங்கிரஸ்
ராகுல் காந்தியை தலைவராக அறிவிப்பதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாகவே குஜராத் தேர்தலை சொல்கிறார்கள். ராகுலின் நடவடிக்கைகளிலும் நிறைய மாற்றம் தெரிகின்றது. பா.ஜ.க இதை புதிய தலைவலியாக உணர்கிறது.
சிக்கலில் பா.ஜ.க
எதிர்க்கட்சிகளின் இந்த நடவடிக்கை நவம்பர் மூன்றாம் வாரத்தில் நடைபெற இருக்கிற பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலும் எதிரொலிக்கும். அப்போது அவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கிறது பா.ஜ.க மேலிடம்.