ராகுலின் ஜம்மு பொதுக்கூட்ட பேச்சை நிறுத்திய பஞ்சாயத்து தலைவரால் சலசலப்பு!
ஜம்மு: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசிய ஜம்மு பொதுக்கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் குறுக்கிட்டு பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. ராகுலும் பேச்சை சிறிது நேரம் சிறுத்த நேரிட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். இன்று ஆயிரக்கணக்கான உள்ளூராட்சி அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
அவர் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவரான உதம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரிக்ஷித் சிங் என்பவர் மற்றொரு மைக்கை பிடித்து பேசத் தொடங்கினார். " உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் அனைவருமே உங்களுக்கு ஆதரவுதான். நாங்கள் காங்கிரஸ் கட்சியினர்தான்.
உங்களுக்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களிடம் ஒரு புகார் இருக்கிறது. மத்திய அரசிடம் அனைத்தும் பெறுகிறோம். ஆனால் மாநில அரசிடம் இருந்து எதுவுமே எங்களுக்கு கிடைப்பது இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக மாநில அரசு எங்களை ஒதுக்கியே வைத்திருக்கிறது.
எங்கள் மேம்பாட்டுக்கு எதுவுமே செய்யவில்லை. நீங்கள்தான் எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றார். அவருக்கு ஆதரவாக ஏராளமான பஞ்சாயத்து தலைவர்களும் குரல் கொடுத்ததால் கூட்டத்தில் பெரும்சலசலப்பு ஏற்பட்டது.
சிறிது நேர சலசலப்பில் அப்செட் ஆன ராகுல் காந்தி, உங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள ஜம்மு காஷ்மீர் அரசை வலியுறுத்துவேன் என்று உறுதியளித்துவிட்டு ஸ்ரீநகர் சென்றார். ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.