விடுமுறையை கழிக்க மட்டுமே இந்தியாவுக்கு வருகிறார் ராகுல் காந்தி: சிவசேனா தாக்கு
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப் பட்ட பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொள்ளாத காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
16வது லோக்சபா தேர்தல் 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதற்கிடையே நாளை மறுநால் ஓய்வு பெறுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.
இதையொட்டி, அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இல்லத்தில் நேற்று பிரிவு உபசார விருந்து அளித்தார். விருந்துக்கு வந்த மன்மோகன்சிங்குக்கும், அவருடைய மனைவி குர்சரண் கவுருக்கும் மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பூங்கொத்து அளித்தனர். மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கையெழுத்திட்ட நினைவுப்பரிசு பிரதமருக்கு வழங்கப்பட்டது.
புகைப்படம்...
அதில் பொறிக்கப்பட்டிருந்த பாராட்டு பத்திரத்தை மத்திய அமைச்சர் பல்லம் ராஜு வாசித்தார். விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மன்மோகன்சிங்குடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ராகுல் கலந்து கொள்ளவில்லை...
ஆனால், இந்த விருந்து நிகழ்ச்சியில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அவர் கடந்த வாரமே பிரதமரை சந்தித்து தன்னால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று அவரிடம் கூறிவிட்டதாக அதிகராப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டனம்...
இந்நிலையில், பிரதமருக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபச்சார விழாவில் ராகுல் கலந்து கொள்ளாததைக் கண்டித்து மற்ற கட்சிகள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
விடுமுறைக்கு வந்தவர்...
இது தொடர்பாக, சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், ‘ராகுல்காந்தி வெளிநாட்டை சேர்ந்தவர். விடுமுறைக்காக இந்தியா வருவார். அவரது வேலை முடிந்துவிட்டதும் அவரது வெளிநாட்டு வீட்டுக்கே திரும்பிவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
அவமதித்து விட்டார்...
பாஜக தலைவர் தருண் விஜய் கூறுகையில், ‘சீதாராம் கேசரியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவமதித்தது போன்று ராகுல் காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கை பிரிவு உபசார விருந்தில் கலந்து கொள்ளாமல் அவரை அவமதித்து விட்டார்' என குற்றஞ்சாட்டியுள்ளார்.
தவறான செயல்....
அதேபோல், 10 வருடங்களாக பிரதமராக இருந்த ஒருவருக்கு சிறப்பான பிரிவு உபச்சார விழா நடத்த வேண்டும். ராகுல் காந்தி கண்டிப்பாக கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் அபிமன்யு கூறியுள்ளார்.