திறமையாளர்களை கழற்றிவிட்டு ராகுல் காந்தி உருவாக்கியுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டி.. பாஜக செம குஷி
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரிய கமிட்டிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள பழைய மற்றும் புதிய ரத்தங்களை காரிய கமிட்டிக்கு பாய்ச்சும் நடவடிக்கை என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.
ஆனால் புதிய நிர்வாகிகளால் காங்கிரசுக்கு லாபம் கிடைக்குமா அல்லது அனுபவம் இல்லாத பல உறுப்பினர்களால் சறுக்கல்தான் ஏற்படுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
23 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியை அமைத்துள்ளார் ராகுல் காந்தி. 19 பேர் நிரந்தர அழைப்பாளர்களாகவும், 9 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சில சீனியர்கள் தப்பினர்
சோனியா காந்தி தவிர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோதிலால் வோரா, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல், அம்பிகா சோனி ஆகிய சோனியா காந்தியின் வலது கரங்கள் என கருதப்படும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த சீனியர்கள் காரிய கமிட்டியில் நீடிக்கிறார்கள். எனவே தாய் முடிவில் ராகுல் தலையிடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
திக்விஜயசிங்கிற்கு திக், திக்
அதேநேரம், மூத்த தலைவர்களான திக்விஜய் சிங், ஜனார்த்தன் திவிவேதி, கமல்நாத், சுஷில் குமார் ஷிண்டே, மோகன் பிரகாஷ், சி.பி.ஜோஷி ஆகியோர் காரிய கமிட்டியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் முதல்வர்களான சித்தராமையா, உம்மன் சாண்டி, அசோக் கெலாட், தருண் கோகாய், ஹரிஷ் ராவத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புது டீம் சாதிக்குமா, சறுக்குமா?
புதிய காரிய கமிட்டி என்பது ராகுல் காந்திக்கு ஒரு பெரும் ரிஸ்க் ஃபேக்டர் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இன்னும் 12 மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், ராகுல் காந்தியின் புதிய டீம் அதற்குள் ஃபார்முக்கு வர வேண்டுமே என்ற கவலை காங்கிரஸ் தொண்டர்களுக்கு இருப்பதை மறைக்க முடியாது.
ராகுல் வியூகம் சந்தேகம்
வோரா, முகுல் வாஸ்னிக், ஆனந்த் ஷர்மா போன்ற காரியத்தில் சாதிக்காதவர்களுக்கு, காரிய கமிட்டியில் இடம் கொடுத்துள்ளது ராகுல் காந்தியின் வியூகத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சட்ட அமைச்சர்களாக இருந்த வீரப்ப மொய்லி, அஸ்வனி குமார், சல்மான் குர்ஷித், கபில் சிபல் ஆகிய ஒருவரில் கூட காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இடம் பெறவில்லை.
சட்ட வல்லுநர்கள் இல்லை
இது தவிர கட்சியில் உள்ள மூத்த சட்ட வல்லுநர்கள் மனிஷ் திவாரி, அபிஷேக் மனு சிங்வி ஆகியோரில் ஒருவர் கூட காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இடம் பெறவில்லை. முன்னாள் உள்துறை மற்றும் நிதி அமைச்சராக பதவி வகித்து அனுபவம் கொண்ட ப. சிதம்பரம் இயல்பாகவே ஒரு வக்கீலும் கூட. சட்டத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். அவருக்கும் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் உறுப்பினராக இடம் கிடைக்கவில்லை. அதே நேரம் நிரந்தர அழைப்பாளர் என்ற வகையில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
முன்னாள் உள்துறை அமைச்சர்களும் இல்லை
வரும் வாரங்கள் அல்லது வரும் மாதங்களில் நிறைய நுணுக்கமான சட்ட விவகாரங்களில் காங்கிரஸ் கட்சி உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில் அனுபவம் கொண்ட, சட்ட வல்லுனர்கள் இல்லாத ஒரு கமிட்டியை ராகுல்காந்தி அமைத்துள்ளது எந்த வகையான வியூகம் என்பதில் குழப்பம் நிலவுகிறது. சுஷில் குமார் ஷிண்டே ,சிவராஜ் பாட்டில் போன்ற முன்னாள் உள்துறை அமைச்சர்களுக்கும் காரிய கமிட்டியில் இடம் கிடைக்கவில்லை.
நோக்கமே தெரியவில்லை
புதிய கமிட்டியில் பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த யாருமே பிரதிநிதித்துவம் பெறவில்லை. இந்த மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. வருமாண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள புதிய கமிட்டியை ராகுல் காந்தி அமைத்ததாக கூறப்பட்டது. ஆனால் அதற்கான எந்த சமிக்ஞையையும் இந்த கமிட்டியில் இருந்து மக்களோ, தொண்டர்களோ, அரசியல் பார்வையாளர்களோ கூட பெற முடியவில்லை என்பதே நிதர்சனம்.