லோக்சபா தேர்தலில் காங் மெஜாரிட்டியுடன் வென்றால் நானே பிரதமர்- ராகுல் காந்தி பிரகடனம்
2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் எங்கள் கட்சி தனிபெரும்பான்மை பெற்றால் அடுத்த பிரதமர் நான் தான் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
Recommended Video
பெங்களூர்: 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் எங்கள் கட்சி தனிபெரும்பான்மை பெற்றால் அடுத்த பிரதமர் நான்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி இன்று பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், வரும் லோக்சபா தேர்தலில் மோடி பிரதமராக மாட்டார். அவர் முகத்தை பார்த்தாலே தெரிகிறது. அது அவருக்கே தெரிந்து விட்டது என்றார்.
நானே பிரதமர்
அப்போது நீங்கள் பிரதமராவீர்களா என்ற கேள்விக்கு ராகுல் பதிலளிக்கையில் நிச்சயமாக, ஆனால் அது எங்கள் கட்சி வெற்றி பெறுவதை பொறுத்தது ஆகும். ஒரு வேளை காங்கிரஸ் கட்சி தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் நானே பிரதமர்.
பிரதமராக மாட்டார்
கூட்டணி கட்சிகளுடன் நாங்கள் நன்றாக செயல்பட்டால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு என்பதே இல்லை. எனவே பாஜக ஆட்சியை அமைக்கும் என்பதும் மோடியே அடுத்த பிரதமராவார் என்பதும் நடக்கவே நடக்காது என்றார் அவர்.
தயக்கம்
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆகியன பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத 3-ஆவது அணிக்கு முயற்சித்து வருகிறது. அதேவேளையில் சமாஜவாதி கட்சியும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ராகுலின் தலைமையை ஏற்க தயக்கம் காட்டுவது போல் தெரிகிறது.
மக்களவை தேர்தலில் போட்டியிட தயார்
இந்த நிலையில் ராகுல் பிரதமராவேன் என்று இன்றுதான் கூறவில்லை. அவர் கடந்த ஆண்டு பெர்க்லேவில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது கூட வரும் 2019 -ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தான் தயார் என்று கூறியிருந்தார்.