விவாதங்களுக்கு அஞ்சி நாடாளுமன்றத்துக்கு வராமல் ஓடி ஒளிகிறார் பிரதமர்: ராகுல் ருத்ரதாண்டவம்!!
டெல்லி: விவாதங்களுக்கு அஞ்சி நாடாளுமன்றத்துக்கு வராமல் பிரதமர் நரேந்திர மோடி ஓடி ஒளிகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முழுவதுமே எதிர்கட்சிகளின் அமளியால் முடங்கிப் போனது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இரு சபைகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:
I am here to protect the people from RSS, from Narendra Modi: Rahul Gandhi pic.twitter.com/jX8jxIXNAX
— ANI (@ANI_news) August 13, 2015
லலித்மோடி விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு அஞ்சுகிறது. இந்த விவகாரத்தில் இருந்து பிரதமர் மோடி ஒடி ஒளிகிறார்.
நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி வராதது ஏன்? லலித் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர மோடி அஞ்சுகிறார்....அவரால் லலித் மோடியை இந்தியாவுக்கு கொண்டுவர முடியுமா?
கருப்புப் பணம் மற்றும் அரசியலை இணைக்கின்ற முக்கிய பாலமாக விளங்குகிறார் லலித் மோடி. லலித்மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ்தான் பாதுகாவலராக இருந்து வருகிறார்.
நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுஷ்மா ஸ்வராஜ் பதில் சொல்லவே இல்லை. எங்கள் குடும்பம் மீது 30 ஆண்டுகளாக விமர்சனம் இருந்து வருகிறது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜிவ்காந்தி குற்றமற்றவர் என நீதிமன்றமே கூறியிருக்கிறது.
பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம், கல்வி நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிக்கிறது. இந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிரதமர் மோடியிடம் இருந்து நாட்டை மீட்பதற்கான எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.