லோக்சபாவில் கோஷம் போட்ட ராகுல்- ஆச்சரியத்தில் பாஜக!
டெல்லி: லோக்சபாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் எழுந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி.க்களையும் ஆச்சரியப்பட வைத்தது.
16வது லோக்சபாவின் முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. லோக்சபாவில் விலை வாசி உயர்வு பிரச்சனையை முன்வைத்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை அளிக்க வேண்டும் என்றும் காங்கிரசார் வலியுறுத்தினர். இதனால் லோக்சபா நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அப்போது ராகுல் காந்தியும் இதர காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுடன் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினார். இது குறித்து பாரதிய ஜனதா கட்சி ஆச்சரியம் தெரிவித்துள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் பிரதாப் ரூடி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி லோக்சபாவில் அவமானம்-அவமானம் என்று கோஷம் எழுப்பியது எங்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ராகுல் காந்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அவர் தற்போது இதுபோன்று கோஷங்களை எழுப்புகிறாரே என்றார் ராஜீவ் பிரதாப் ரூடி.