இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்?
டெல்லி: இன்றைய ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு பெரிதாக இருக்காது என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கட்கிழமை துவங்கியது. இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி அனைத்து கண்களும் சதானந்த கவுடா மீது உள்ளது.
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம் என்று பார்ப்போம்.
கட்டண உயர்வு
கடந்த 20ம் தேதி தான் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டது. அதனால் இன்றைய பட்ஜெட்டில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.
நிதி
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, தனியார் நிறுவனங்களை கவர, ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு-தனியார் கூட்டணியை அமைக்க தேவையான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை சதானந்த கவுடா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிவேக ரயில்கள்
மும்பை-அகமதாபாத் இடையே மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும். மேலும் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 கிலோ மீட்டரில் இருந்து 200 கிலோ மீட்டராக உயர்த்தும் அறிவிப்பும் உண்டு.
பாதுகாப்பு
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த, ரயில்களில் அளிக்கப்படும் வசதிகளை மேம்படுத்த உள்ளார் கவுடா. ரயில்களில் இனி ஊழியர்கள் அவ்வப்போது கழிவறைகளை சுத்தம் செய்வார்களாம்.
புதிய ரயில்கள்
இன்றைய பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு பெரிதாக இருக்காது. ஏன் என்றால் அவர் ஏற்கனவே நிலுவையில் உள்ள ரயில் திட்டங்களை முதலில் முடிக்க முடிவு செய்துள்ளாராம்.
விபத்துகள்
ரயில் விபத்துகளை தடுக்க ரயில் பாதையில் ஏற்படும் சேதம், சக்கர பாதிப்பு உள்ளிட்டவற்றை கண்டறியும் அதிநவீன கருவிகளை பயன்படுத்துவது குறித்து கவுடா அறிவிக்கக்கூடும்.
எரிபொருள்
எரிபொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே போவதால் ரயில்வே துறைக்கு எரிபொருள் பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதனால் மாற்று எரிபொருட்களான சூரியசக்தி, பயோ டீசல் போன்றவற்றை பயன்படுத்துவது குறித்து இன்று கவுடா அறிவிக்கலாம்.
அன்னிய நேரடி முதலீடு
இந்திய ரயில்வே துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக இருந்தாலும் இதுநாள் வரை அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் வருவாயை கூட்ட ரயில்வே துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம்.
வடகிழக்கு இந்தியா
ரயில்வே துறை தொட்டிராத வடகிழக்கு மாநிலங்களுக்கு புதிய ரயில்கள் அறிவிக்கபடலாம். புதிய ஹர்முதி-நஹர்லகுன் லைன் மூலம் ரயில்வே வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம் இடம்பெறும்.