ஒரு வேளை அதுவா இருக்குமோ? மோடி - கெலாட் புகழ்ச்சி.. பறந்து வந்த பைலட்! ராஜஸ்தான் காங்கிரஸில் புயல்
ஜெய்பூர்: பிரதமர் நரேந்திர மோடியும் - ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டது சந்தேகம் தருவதாகவும் இதனை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது என்றும் அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற விடுதலை போராட்ட தியாகிகளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்தார். "இந்தியா அடுத்தடுத்து வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. இந்தியா மீதான மரியாதை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
மோடி அங்கே அழறார்.. ஆனா முதல்வர் ஸ்டாலின்?.. அவரை வெளியேவர சொல்லுங்க: பாஜக வினோஜ் பி. செல்வம் கேள்வி
மோடியை புகழ்ந்த கெலாட்
நாம் ஒரு காலத்தில் அடிமையாக இருந்தோம். இன்று நம் நாடு பெரும் உயரத்தை அடைந்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தான் செல்லும் நாடுகளில் எல்லாம் நல்ல மரியாதையை பெற்று வருகிறார். ஜனநாயகத்தின் வேர்கள் வழுவாகவும் ஆழமாகவும் உள்ளது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பிறகும் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும் மகாத்மா காந்தியின் நாட்டின் பிரதமராக மோடி இருப்பதை உலகமே உணர்ந்து பெருமைப்படுத்துகிறது." என்றார்.
கெலாட்டை பாராட்டிய மோடி
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி அந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போதும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை புகழ்ந்தார். இந்த மேடையில் அமர்ந்து இருக்கும் முதலமைச்சர்களில் மூத்தவர் அசோக் கெலாட்தான் என்று பாராட்டிய அவர், இந்த புனித பூமிக்கு வந்து சிரம் பணிவது நான் பெருமையாக கருதுகிறேன் என்றார்.
சச்சின் பைலட்
இந்த நிலையில் அசோக் கெலாட்டும் - பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசிக்கொண்டது ராஜஸ்தான் மாநில அரசியலும், காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் புயலை கிளப்பி இருக்கிறது. மாநில காங்கிரஸில் அசோக் கெலாட்டுக்கு எதிரணியில் இருக்கும் ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இந்த விவகாரத்தை வைத்து சந்தேகத்தை கிளப்பி இருக்கிறார்.
ஆசாதை புகழ்ந்த மோடி
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட், "நேற்று பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை புகழ்ந்ததை சாதாரண விசயமாக எடுத்து கடந்து செல்ல முடியாது. இதேபோல்தான் குலாம் நபி ஆசாத் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்தார். அடுத்து என்ன நடந்தது என்று நமக்கு தெரியும்." என சந்தேகம் கிளப்பி இருக்கிறார்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அதேபோல் ராஜஸ்தான் மாநில காங்கிரஸுக்குள் குழப்பம் ஏற்படுத்தி வரும் அசோக் கெலாட் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சச்சின் பைலட் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வலியுறுத்தினார். "சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே உள்ளன. கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள எம்.எல்.ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
2018 தேர்தல்
அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுமான மோதல் என்பது புதிதல்ல கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வென்றது. இதற்கு சச்சின் பைலட்டின் உழைப்பே முக்கிய காரணம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
புகைச்சல்
ஆனால், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும் சீனியர் தலைவருமான அசோக் கெலாட்டை முதலமைச்சராக அறிவித்தது காங்கிரஸ் தலைமை. இதனை தொடர்ந்தே இரு தலைவர்களிடையே புகைச்சல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
ஆட்சி கவிழ்ப்பு என்ற அளவுக்கு பிரச்சனை பூதாகரமானது. ஆனால், சச்சின் பைலட், சிந்தியாவைபோல் பாஜகவுக்கு செல்ல விரும்பாததால் காங்கிரஸ் தலைமையின் பேச்சை கேட்டு அமைதியானார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கெலாட்டை நிறுத்த காந்தி குடும்பம் முடிவு செய்தது. கெலாட் தலைவரானால் சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க வேண்டும் என்ற பேச்சும் எழுந்தது.
மீண்டும் புயல்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 82 பேர் ராஜினாமா கடிதம் அளித்தனர். இதனால் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் ராஜஸ்தான் முதலமைச்சராகவே தொடர விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு புயல் வெடித்துள்ளது புதிய காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.