ராஜஸ்தான் வருவாய்த் துறை அமைச்சர் ஹேமாராம் சவுத்ரி திடீர் மாயம்
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஹேமாராம் சவுத்ரி திடீர் என்று மாயமாகி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் குடமலனி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் ஹேமாராம் சவுத்ரி. காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தானின் அசோக் கெஹ்லாட் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக உள்ளார் சவுத்ரி.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் அவரை மீண்டும் குடமலனி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. ஆனால் அவருக்கு அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமில்லை. இதனால் குடமலனி தொகுயில் போட்டியிட அவர் மறுத்தார். இந்நிலையில் அவர் திடீர் என்று மாயமாகியுள்ளார்.
முன்னதாக சவுத்ரி கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பார்மர் மாவட்டம் லீலாலாவில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பச்பர்தாவுக்கு மாற்றுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பாக உள்ளது.