பரபரப்பு.. ஆன்மீக பயணத்திற்கு நடுவே, இமாச்சல பிரதேச பாஜக தலைவருடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் அம்மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரேம் குமார் துமால் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசியுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று டெல்லி சென்ற ரஜினிகாந்த் அங்கிருந்து மற்றொரு விமானத்தில் இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லா வழியாக தர்மசாலா சென்றார்.
தர்மசாலாவையொட்டி பனி படர்ந்த மலைப்பிரதேசத்தில் கன்ட்பாடி என்ற சிறிய மலைகிராமம் உள்ளது. அங்கு பாபா ஆசிரமமும், தியான மண்டபமும் உள்ளது. இந்த ஆசிரமத்துக்கு சென்ற ரஜினிகாந்த் ஓய்வுக்கு பிறகு, தியான மண்டபத்துக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார்.
அரசியல் தலைவர்
திபெத்தியர்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதியில், ரஜினிகாந்த் திபெத்தியர்கள் அணியும் தொப்பி அணிந்து இருந்தார். இதனிடையே, தியான மண்டபத்தில் இருந்த ரஜினிகாந்தை இமாச்சலப்பிரதேச மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரேம் குமார் துமால் சந்தித்துப் பேசினார்.
அரசியல் ஆலோசனை?
அப்போது ரஜினியின் அரசியல் மற்றும் ஆன்மீக பயணம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த்தை ஆசிரம நிர்வாகியும், சாமியாருமான பாபா அமர் ஜோதியும் சந்தித்தார்.
|
டுவிட்டரில் படம்
ரஜினிகாந்த்துடனான சந்திப்பு படத்தை டுவிட்டரில் வெளியிட்ட பிரேம்குமார் துமால், ரஜினிகாந்துடன் செலவிட்ட மதிப்பு மிக்க நேரம் மகிழ்ச்சிக்குரியது. அவரை விருந்தினராக ஏற்பதில் இமாசல பிரதேச மக்கள் மகிழ்கிறார்கள். இமாசல பிரதேசத்தில் உங்கள் தருணங்கள் சிறப்பாக அமையும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சந்திப்பா?
ஆன்மீக பயணத்தின்போது அரசியல் பேசுவதில்லை என நிருபர்களிடம் தெரிவித்த ரஜினிகாந்த்தை, பாஜக தலைவர் ஒருவர் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என ரஜினிகாந்த் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.