உள்நாட்டு பாதுகாப்பு பற்றி உளவுத்துறை அதிகாரிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை
டெல்லி: துணை ராணுவப்படை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்த செயல் திட்டத்தை உருவாக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டெல்லியில் இன்று, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் ஆசிப் இப்ராஹிம், ராய் அமைப்பின் தலைவர் அலோக் ஜோஷி, துணை ராணுவப்படை தலைவர் பங்கேற்றனர். இதில் உள்நாட்டு பாதுகாப்பு, நக்சலைட்டுகளை கட்டுப்படுத்துவது, மத்திய மாநில உறவுகள், வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அரை மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பிறகு, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான செயல் திட்டத்தை உருவாக்கி அடுத்த சில நாட்களில் மீண்டும் ஆலோசிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. தேசிய நலனை பாதுகாக்கும் அதே நேரத்தில் அண்டை நாடுகளுடான எல்லை பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்பது குறித்த யோசனைகள் இந்த புளுபிரிண்ட்டில் இருக்க வேண்டும் என்று ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.