பணம்தான் கடவுள்... பணத்தடையால் கிராம மக்கள் தவிக்கிறார்கள்- ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி., பேச்சு
டெல்லி: ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் கிராமங்களில் சுப காரியாங்கள் முடங்கியுள்ளன. அவசர மருத்துவச் செலவுகள் ஏன் மரணம் நிகழ்ந்த வீட்டில்கூட செலவுக்கு காசு இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர் என்று ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு அறிவிப்புகளால், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் தமிழக மக்களுக்கு சேவைகளை அளிக்க இயலாமல் முடங்கிப்போயுள்ளன என்று 8 நாட்களுக்குப் பிறகு தமிழக அரசு வாய் திறந்து அறிக்கை வெளியிட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. ராஜ்யசபாவில் பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், தமிழகத்தின் நிலையை பதிவு செய்தார்.
மத்திய அரசின் நோட்டு நடவடிக்கையால் கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் சேமிப்பும் வாழ்வாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அறிவித்தது. தமிழகத்தில் இதனால் கிராமப்புற ஏழை, எளிய மக்களே வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக எப்போதுமே கறுப்புப்பணத்தை எதிர்க்கிறது. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் எங்கள் கட்சி எப்போதுமே வரவேற்றிருக்கிறது. கறுப்புப் பணத்தை முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கிறார். ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இவ்வாறாக புழக்கத்தில் இருந்த பணத்தை செல்லாது என அறிவித்ததால் கிராமப்புறங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை மத்திய அரசு படிப்படியாக செயல்படுத்தியிருக்க வேண்டும்.
கிராமங்களில் வங்கிகள் குறைவு. அவ்வாறு வங்கியிருந்தாலும் அவற்றில் சேமிக்கும் பழக்கம் பெரும்பாலான கிராமவாசிகளிடம் இல்லை. இந்நிலையில் அரசின் திடீர் அறிவிப்பால் கிராமங்களில் சுப காரியாங்கள் முடங்கியுள்ளன. அவசர மருத்துவச் செலவுகள் ஏன் மரணம் நிகழ்ந்த வீட்டில்கூட செலவுக்கு காசு இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் சாதாரண மக்கள்தான் வரிசையில் நின்று காத்திருக்கின்றனர். பணக்காரர்களுக்கு தங்கள் பதுக்கல் பணத்தை எப்படி தங்கமாக மாற்ற வேண்டும் என்பது தெரியும்.
ஏற்கெனவே நம் நாட்டின் கிராமப்புற பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் கிராமப்புற பொருளாதாரம் மேலும் மோசமடைந்துள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்த விசயத்தை சரியாக கையாளத் தெரியாமல் தோல்வியடைந்து விட்டது என்றும் நவநீதகிருஷ்ணன் கூறினார்.
பணம்தான் நவீன கடவுள். பணம் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் யாராலும் வாழமுடியாது என்று கூறிய நவநீதகிருஷ்ணன் கடைசியில் அம்மாவிற்கு மறக்காமல் நன்றி சொல்லி முடித்தார்.












Click it and Unblock the Notifications