காங்கிரஸுடன் கூட்டு சேர நாங்க ரெடி.. தேவ கவுடா அதிரடி
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயார் என மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது.
Recommended Video
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடனான கூட்டணிக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் தயார்... எத்தனை இடங்களை ஒதுக்கும் என்பதை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. ஒக்கலிகா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பழைய மைசூரு பகுதிகளில் ராகுல் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த பிரசாரத்தின் போது ஒக்கலிகா சமூகத்தினர் ஆதரிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை பாஜகவின் பி டீம் என ராகுல் விமர்சித்தார். இது மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவ கவுடாவை கொந்தளிக்க வைத்துள்ளது.
இது தொடர்பாக தேவ கவுடா கூறியதாவது:
காங்கிரஸுடன் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு எத்தனை இடங்களை காங்கிரஸ் ஒதுக்கும் என அறிவிக்கட்டும். அதன்பின் காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என்பதை நாங்கள் சொல்லுகிறோம்.
அதேநேரத்தில் தேர்தலுக்குப் பின் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைத் தவிர காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. இவ்வாறு தேவ கவுடா கூறினார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 12-ந் தேதி நடைபெறுகிறது. மதச்சார்பற்ற ஜனதா தலம் 204 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 20 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடுகிறது. இதில் 8 ரிசர்வ் தொகுதிகளாகும்.