அஸ்ஸாம் ராணுவ அதிகாரிக்கு வந்த சோதனை... இந்திய குடிமகன் என நிரூபிக்க போலீஸ் உத்தரவு
அஸ்ஸாம் ராணுவ அதிகாரியை இந்திய குடிமகன் என நிரூபிக்க போலீஸ் உத்தரவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
குவஹாத்தி: அஸ்ஸாம் ராணுவ அதிகாரி முகமது அஸ்மலை இந்திய குடிமகன் என நிரூபிக்க அம்மாநில போலீஸ் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முகமது அஸ்மல். 1971-ல் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறினார் என்கிற அடிப்படையில் இந்திய குடிமகன் என நிரூபிக்க போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 13-ந் தேதி இது தொடர்பாக அவர் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அஸ்மல், ஏற்கனவே இதேபோல் எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சனை வந்தது.
அப்போது உரிய ஆவணங்களைக் காட்டி இந்திய குடிமகன் என நிரூபித்தேன். என்னை ஜனாதிபதியாக இருந்த மறைந்த அப்துல் கலாம்தான் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக நியமித்தார் என கூறியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் 1968 -ம் ஆண்டு காம்ரப் மாவட்டத்தில் பிறந்தார் அஸ்மல். ஆனால் அஸ்ஸாம் போலீஸ் சட்ட விரோதமாக குடியேறியவர் என கூறியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.