ஆந்திராவில் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் நகை, பணம் பறித்த முகமூடி கொள்ளையர்கள்
குண்டூர்: சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற ரயிலில் முகமூடி கொள்ளையர்கள் பயணிகளை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி நகை, பணம் பறித்துள்ளனர்.
சென்னையில் இருந்து ஹைதராபாத் கிளம்பிய சென்னை எக்ஸ்பிரஸ் ரய்லே நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிடுகுரல்லா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்த முகமூடி அணிந்த 10 வாலிபர்கள் திடீர் என்று ஸ்லீப்பர் பெட்டிகளுக்குள் புகுந்தனர்.
அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் இருந்து தங்க நகைகள், செல்போன்கள், பணம் ஆகியவற்றை பறித்தனர். தங்களை எதிர்த்த பயணிகளை அவர்கள் கன்னத்தில் அறைந்துள்ளனர். மேலும் அவர்கள் சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தி தப்பியோடிவிட்டனர்.
அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. அவர்கள் திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில்,
கொள்ளையர்கள் முதலில் எஸ்-5 பெட்டியில் ஏறினார்கள். அங்குள்ளவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்துக் கொண்டு அவர்கள் எஸ்-7, எஸ்-8, எஸ்-9, எஸ்-11 மற்றும் எஸ்-12 பெட்டிகளிலும் கொள்ளையடித்தனர். அவர்கள் மிகவும் துரிதமாக செயல்பட்டனர் என்றனர்.