ஈவ் டீசிங் செய்தவர்களை அடித்து உதைத்த பெண்களுக்கு பரிசு… டிரைவர்,கண்டக்டர் சஸ்பெண்ட்
சண்டிகர்: பேருந்தில் ஈவ் டீசிங் செய்த இளைஞர்களைத் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்த இளம் சகோதரிகளின் துணிச்சலைப் பாராட்டி ஹரியானா மாநில அரசு, அவர்களுக்கு பரிசாக தலா ரூ.31,000 அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக இளம் சகோதரிகள் புகார் தெரிவித்தும் அமைதியாய் இருந்த பேருந்தின் நடத்துனர், ஓட்டுனர் இருவரையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோஹ்டக் நகரில் அரசுப் பேருந்தில் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி இளம் சகோதரிகள் ஆர்த்தி குமார், பூஜா ஆகியோர் பயணம் செய்துள்ளனர். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த சில இளைஞர்கள் இந்த இளம்பெண்களை ஈவ் டீசிங் செய்து அவமானப்படுத்தி உள்ளனர்.
மேலும் அந்த இளைஞர்கள் அவர்கள் மீது, தங்கள் செல்போன் எண் எழுதப்பட்ட காகித துண்டுகளை வீசியுள்ளனர்.
பாலியல் ரீதியிலான கேலியும் கிண்டலும் கலந்த சொற்களால் தொடர்ந்து டார்ச்சர் செய்யவே அதை பொறுக்க முடியாத அந்த சகோதரிகள் ஒன்று சேர்ந்து அவர்களை எதிர்த்துள்ளனர்.
கூட்டம் நிறைந்த பேருந்தில் யாரும் இவர்களுக்கு உதவிக்கு முன் வராத போது, கர்ப்பிணி பெண் ஒருவர் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். ஆனால் அந்த இளைஞர்கள் மீண்டும் மீண்டும் சீண்டலில் ஈடு பட்டுள்ளனர். அந்த கர்ப்பிணி பெண்ணையும் மிரட்டி தாக்க முயன்றனர்.
இதனால் பொங்கி எழுந்த இளம்பெண்கள், அந்த இளைஞர்களை துணிச்சலாக எதிர்த்தனர். தங்களிடம் இருந்த பெல்ட்டால் முகத்திலும், உடம்பிலும் மாறி மாறி அடித்து துவைத்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த காட்சிகளை பேருந்தில் இருந்த மற்றொரு பெண் பயணி செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ, கடந்த சில நாட்களாக இணைய தளம் மற்றும் மொபைல் போன்களில் பரவியது. ஊடகங்களிலும் இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மூன்று பேர் கைது
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ,குல்தீப், மொஹித், தீபக் என்ற மூன்று இளைஞர்களை ஈவ் டீசிங் வழக்கில் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் 3 பேரும் ராணுவத்தில் வேலைக்கு சேர இருந்தவர்கள்.. ஆனால் இத்தகைய நடத்தை கொண்டவர்களை பணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புகாரை வாபஸ் பெறுமாறு சம்பந்தப்பட்ட சகோதரிகளை ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட வாலிபர்களின் பெற்றோர்கள் நிர்ப்பந்தத்துள்ளனர். ஆனால் அவர்கள் அந்த நிர்ப்பந்தத்திற்கு அடிபணியவில்லை.
மேலும் பேருந்தில் இந்த சம்பவம் நடக்கும் போது, உடன் பயணித்த பயணிகள் அனைவரும் ஆர்த்தி குமாரிடமும் பூஜாவிடமும், அவர்கள் பயங்கர மாணவர்கள்,உங்கள் முகத்தில் ஆசிட் வீசி விடுவார்கள் , பலாத்காரம் செய்து கொன்று விடுவார்கள் என்று கடுமையாகப் பயமுறுத்தி உள்ளனர்.
ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத இளம் சகோதரிகள், அவர்களை எதிர்த்துப் போராடி அடித்து உதைத்து போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து உள்ளனர்.
பெண்களுக்கெதிரான கொடுமைகள் குற்றங்கள் குறித்துப் புகார் செய்ய அமைக்கப் பட்ட தொலைபேசி ஹெல்ப் லைன் பயனில்லாமல் போயுள்ளது. பல முறை எங்கள் மீதான பாலியல் தொந்தரவு குறித்து ஹெல்ப் லைன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த போதும், உடனே திரும்ப அழைக்கிறோம் உதவுகிறோம் என்றனர். ஆனால் இது வரை யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை` என்று பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கூறினர்.
இந்தநிலையில் ஈவ் டீசிங் செய்த இளைஞர்களைத் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்த இளம் சகோதரிகளின் துணிச்சலைப் பாராட்டி ஹரியானா மாநில அரசு, அவர்களுக்கு பரிசாக தலா ரூ.31,000 அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றியும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணப் பரிசு குறித்தும் சகோதரிகளின் தந்தை கூறுகையில், எனது மகள்கள் இருவரும் துணிச்சலாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்துள்ளனர். எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றார்.
ஈவ் டீசிங் தொடர்பாக இளம் சகோதரிகள் புகார் தெரிவித்தும் அமைதியாய் இருந்த பேருந்தின் நடத்துனர், ஓட்டுனர் இருவரையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.