“உச்சக்கட்ட” பரபரப்பில் குஜராத்.. நெருங்கும் தேர்தல்! ரூ.100 கோடி கள்ளநோட்டு - சிக்கியது எப்படி?
காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் ரூ.90 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளை கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து இருக்கின்றனர். மேலும் மேலும் ரூ.10 கோடி மதிப்பு கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு கள்ள நோட்டுக்களையும் கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி பண மதிப்புழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் இன்னும் கள்ளநோட்டுக்களும், கருப்பு பணமும் புழக்கத்தில் இருக்கவே செய்கின்றன.
அந்த வகையில் தற்போது குஜராத்தில் ரூ.90 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்களை சூரத் போலீசார் கைப்பற்றி உள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் கள்ள நோட்டு மோசடி நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலில் காங். வாக்குகளுக்கு ஆம் ஆத்மி ஆப்பு- சி வோட்டர் கருத்து கணிப்பு
மூவர் கைது
கள்ளநோட்டு கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஹித்தேஷ் கோடதியா என்பவரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி படேல் மற்றும் தினேஷ் ஆகியோரையும் சூரத் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். கள்ளநோட்டு வழக்கில் கைதான மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஆம்புலன்ஸில் கள்ளநோட்டுக்கள்
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து காம்ரெஜ் நகரில் இயங்கிக் கொண்டு இருந்த ஒரு ஆம்புலன்ஸில் ரூ.25.80 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுக்களை போலீசார் கைப்பற்றினர். கோடதியாவின் சொந்த ஊரான ஜாம்நகர் கல்வாட் அருகே உள்ள மோடா வாடா பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.53 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்களும் சிக்கின.
ரூ.2000 மதிப்பு நோட்டுக்கள்
பறிமுதல் செய்யப்பட்டவற்றில் பெரும்பாலானவை ரூ.2,000 கள்ளநோட்டுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கள்ள நோட்டுக்களை 25 பெட்டிகளில் அந்த கும்பல் மறைத்து வைத்திருந்தது. போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க ஆம்புலன்ஸ் உதவியுடன் கள்ள நோட்டுகளை கோடதியா பதுக்கி இருக்கிறார்.
மேலும் இருவர்
இவர்களின் கள்ளநோட்டுக்களில் 17-ல் 14 அடையாளங்கள் உண்மையான ரூபாய் நோட்டுக்களும் பொருந்திப்போயின. உள்ளுக்குள் அச்சிடப்பட்டு இருந்த ரூபாயின் மதிப்பு மற்றும் நடுவில் இருக்கு வெள்ளி நூலிழை ஆகியவை கள்ள நோட்டுக்களில் இல்லை. இந்த கள்ள நோட்டு கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விகாஷ் ஜெயின், தினநாத் யாதவ் ஆகியோரை காவல்துறை தேடி வருகிறது,
நெருங்கும் தேர்தல்
இதுகுறித்து ஜாம்நகர் காவல் துணை கண்காணிப்பாளர் பிரேம்சுக்தெலு தெரிவிக்கையில், "அண்மை காலத்தில் மிகப்பெரிய அளவில் கள்ளநோட்டுக்கள் சிக்குவது இதுவே முதல்முறை. ரூ.90 கோடி கள்ள நோட்டுக்கள் சிக்கியுள்ளன. மேலும் ரூ.10 கோடி கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்ய உள்ளோம்." என்றார். குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இவ்வளவு மதிப்பில் கள்ளநோட்டுக்கள் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.