ஆர்எஸ்எஸ் தலைவர்கள் டெல்லியில் முகாம்: அரசியல் காய் நகர்த்தல்கள் ஆரம்பம்
டெல்லி: தேர்தல் முடிவுகள் வந்ததும் பாஜகவுக்குள் ஏற்படும் குழப்பத்தை தீர்க்கவும், கூட்டணி குறித்த இறுதி முடிவை எட்டச் செய்யவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
மெஜாரிட்டி கிடைக்காது..
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ், மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக முழு வீச்சில் தேர்தல் பணிகளை செய்தது. இருப்பினும் ஆர்எஸ்எஸ் நடத்தியுள்ள கள ஆய்வுப்படி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சியமைக்க தேவையான அறுதி பெரும்பான்மை கிடைக்காது என்று தெரியவந்துள்ளது. சுமார் 30 முதல் 50 சீட்டுகள் குறையலாம் என்று ஆர்எஸ்எஸ் தலைமை கருதுகிறது. இதனால் பிற கட்சிகளின் ஆதரவை கேட்க எப்போதும் தயாராக இருக்கும்படி பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அறிவுறுத்தியுள்ளது.
சீனியர்கள் அடம்
பெரும்பான்மை பலம் குறையும்போது பாஜகவுக்குள் குழப்பம் ஏற்படலாம் என்பதால் அதை சமாளிக்க டெல்லியில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்கள் முகாமிட தொடங்கியுள்ளனர். ஒருவேளை பெரும்பான்மை பலத்தை பெற்றாலும், அமைச்சரவையில் கவுரவமான இடம் வேண்டும் என்று சுஸ்மா சுவராஜ் கோரிக்கை விடுப்பது, அமைச்சரவையில் இடம் பெறப்போவதில்லை, மோடிக்கு வழிகாட்டும் இடத்தில்தான் இருப்பேன் என்று 'சீனியர்' அத்வானி அடம் பிடிப்பது போன்றவற்றால் எழும் குழப்பங்களை தீர்க்கவும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் டெல்லிக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர் ஆலோசனை
ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் கடந்த சனிக்கிழமை முதலே, ராஜ்நாத்சிங், மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் இன்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் சோனியுடன் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று மாலைக்குள் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத், பய்யாஜி ஜோஷி ஆகியோரும் டெல்லி வருகிறார்கள்.
சமாதானம் ஆவாரா அத்வானி
இதனிடையே அத்வானியை வழிக்குக் கொண்டு வரும் முயற்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக உமா பாரதி இன்று காலை அத்வானியை சந்தித்துப் பேசினார். மற்றொரு தலைவர் அமித் மிஷ்ரா, ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆட்சி அமைப்பு குறித்து விவாதித்தார். இதனால் பாஜக- ஆர்எஸ்எஸ் வட்டாரமே பரபரப்பாக காணப்படுகிறது.