ஊற்றி மூடப்பட்ட ஊரக வேலை வாய்ப்பு திட்டம்.. குடும்பத்தோடு நகரங்களுக்கு மக்கள் இடம் பெயரும் அவலம்
மும்பை: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தாமல் விட்டதன் விளைவாக கிராமங்களில் இருந்து பெரு நகரங்களுக்கு மக்கள் குடும்பம், குடும்பமாக இடம்பெயருவது தொடர் கதையாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் கிராமங்களும், மும்பை பெருநகரமும் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளன.
மும்பையின் புறநகர் பகுதியான கட்கோபர் பகுதியில், நான்கு மூங்கில் கம்புகளை கொண்டு தார்ப்பாய் வேயப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு குடிலில் வாழும் யசோதாபாய் என்ற 38 வயது பெண்ணின் கதை இதற்கு ஒரு உதாரணம்.
600 கி.மீ தொலைவிலுள்ள, மராட்டிய மாநிலத்தின் தென்கிழக்கு பகுதி கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி கணவர் கோவிந்த் மற்றும் 3 குழந்தைகளோடு மும்பை வந்தவர் இவர்.
கடந்த 3 வருடங்களில் 2வது முறையாக இப்படி குடும்பத்தோடு மும்பை வந்துள்ளார் யசோதாபாய். மும்பையில் கட்டிட வேலைகளுக்கு சென்று நாள் ஒன்றுக்கு ரூ.300 வருவாய் ஈட்டுகிறார் இவர்.
நகரங்களை நோக்கி
600 கிமீ தொலைவிலிருந்து இந்த குடும்பம் மும்பைக்கு வந்துள்ள ஒரு சம்பவமே அரசின் ஊரக வேலை வாய்ப்பு திட்டங்களின் தோல்வியை பறைசாற்ற போதுமானது. ஆனால் சோகம் என்னவெனில் இதுபோல பல ஆயிரம் குடும்பங்கள் நகரங்களை நோக்கி தினமும் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதுதான்.
வேலை வாய்ப்பு திட்ட தோல்வி
ஊரக மக்களை காக்க வந்த கற்பக தரு என்று வர்ணிக்கப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் கடந்த சில வருடங்களாக கேட்பாரற்று கிடப்பதுதான் இந்த இடப்பெயர்வுக்கு முக்கிய காரணம் என்று யசோதாபாயும் ஒப்புக்கொள்கிறார்.
உலக வங்கியே பாராட்டியது
வேலை வாய்ப்பு திட்டத்தில் நிலவும் ஊழல்களால், அது முடக்கப்பட்டு பணி கிடைப்பதே கஷ்டமாகிவிட்டது என்கிறார் அவர். ஆம்.. உலக வங்கியாலேயே புகழப்பட்ட அதே மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை பற்றிதான் இவரும் சொல்கிறார்.
சமீபத்தில்தான் வீழ்ச்சி
"2011-12ம் ஆண்டு வாக்கில், ஊரக வேலை வாய்ப்பு திட்டம் முழு வீச்சில் எங்கள் ஊரில் நடந்தது உண்மைதான். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக நந்தட் மாவட்டம் முகட் தாலுகாவில் இந்த நிலை மோசமாக உள்ளது" என்று கூறுகிறார் துணை தலைமை செயல் அதிகாரி கல்பனா கேசிர்சாகர்.
அங்கே அடித்தால் இங்கே வலிக்கிறது
2012-13 முதல் 2015-16ம் ஆண்டுகளில் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது. இந்த கால கட்டத்தில்தான் மும்பைக்கு குடி பெயருவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
புள்ளி விவரம்
2012-13ல் 45800 பணியாளர்கள் பயன்பெற்றதாகவும் ரூ.25 கோடி செலவிடப்பட்டதாகவும் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2015-16ல் 782 பணியாட்கள்தான் பயன் பெற்றதாகவும் ரூ.26 லட்சம்தான் செலவிடப்பட்டுள்ளதாகவும் கணக்கு உள்ளது. இந்த திட்டம் முடக்கப்பட்டுவிட்டதற்கான சான்று இது என்கிறார்கள் கிராமவாசிகள்.
போலி கணக்கு
அதேநேரம், முகட் சட்டசபை தொகுதி பாஜக எம்எல்ஏவான தஸ்கர் ரதோட் வேறு ஒரு கோணத்தில் இந்த விவகாரத்தை பற்றி தெரிவிக்கிறார். 2009 முதல் 2014வரை மிக அதிக பணியாளர்கள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பலன் பெற்றது போல கணக்கு காட்டப்பட்டுள்ளது.
ஊழல் அகற்றம்
அதில் பெரும்பாலும் போலி கணக்குதான். தொழிலாளர்களுக்கு தருவதாக கூறி அடுத்த மட்டத்தில் இருந்தவர்கள் அரசு பணத்தை ஸ்வாகா செய்துவந்தனர். இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி வந்த பிறகு, ஊழல்வாதிகள் ஒழிக்கப்பட்டு திட்டம் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இப்போது உரிய பலனாளிகளுக்கு மட்டுமே பணம் தரப்படுகிறது. இதுதான் எண்ணிக்கை குறைய காரணம் என்கிறார்.
இதுக்கு என்ன பதில்
ஆனால், யசோதா பாய் போன்றோருக்கு உண்மையாக உழைத்ததற்கும் பணம் வரவில்லையாம். இதனால்தான் அந்த திட்டத்தின்கீழ் பலனை பெற்று சொந்த ஊரிலே வாழ முடியவில்லை என்கிறார் அவர்.