சபரிமலைக்கு செல்ல முயன்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பெண் நிருபர் மீது கல்வீச்சு.. தொடரும் பதற்றம்
சபரிமலை: சபரிமலைக்குள் நுழைய முயன்ற நியூயார்க் டைம்ஸ் பெண் பத்தகிரிகையாளர் சுஹாசினி ராஜ் மீது பக்தர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. தீர்ப்பு வெளியான பிறகு முதல் முறையாக, நேற்று, ஐப்பசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
எனவே, ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பெண்களும் முயன்றனர்.
டிவி சேனல் நிருபர்கள்
ஆனால், பம்பை, நிலக்கல் பகுதிகளில் அவர்களை ஆண் மற்றும் பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தி அனுப்பினர். சபரிமலைக்குள் நுழைய முயன்ற ஆங்கில டிவி சேனல்களை சேர்ந்த இரு பெண் பத்திரிகையாளர்களும் தடுத்து நிறுத்தி அனுப்பப்பட்டனர்.
போராட்டம்
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் இந்தியாவிற்கான நிருபர் சுஹாசினி ராஜ் இன்று பம்பையை கடந்து சபரிமலை நோக்கி சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை போராட்டக்காரர்கள் திருப்பியனுப்பினர்.
காவல்துறைக்கு பாராட்டு
இதுபற்றி சுஹாசினி கூறுகையில், கேரள போலீசாரின் பாதுகாப்புடன்தான் நான் சென்றேன். அப்போது மேலும் முன்னேற விடாமல், போராட்டக்காரர்கள் எங்களை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் நான் பாதிக்கப்படாமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து எனக்கு உரிய பாதுகாப்பை வழங்கியது.
கூடுதல் பாதுகாப்பு
போராட்டக்காரர்களின் தீவிரத்தை பார்த்ததும், கூடுதல் காவல்துறையை வரவழைத்து முன்னேற முடிவு செய்தனர் போலீசார். ஆனால், நான்தான் வேண்டாம் என்று மறுத்து பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பினேன். காவல் நிலையத்தில் எனக்கு முதலுதவி தரப்பட்டு, கொச்சிக்கு காவல்துறை பாதுகாப்போடு வந்துள்ளேன் என்றார்.