ராஜீவ் கொலை வழக்கில் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்துச் செய்யக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். அவையும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் அந்த 3 பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. அவர் ஓய்வு பெற்றதை அடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜராகி வாதாடினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் 13 வழக்குகள் ஒட்டுமொத்தமாக விசாரிக்கப்பட்டு தற்போது தான் விசாரணை முடிவடைந்துள்ளது. தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்ட அந்த வழக்குகளின் தீர்ப்பு இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அந்த வழக்குகளின் தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.
அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.