சாரதா சிட் பண்ட் மோசடி : சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பொதுமக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடிக்கு மேல் நிதி திரட்டி மோசடி செய்த சாரதா சிட் பண்ட் நிறுவன மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், அஸ்ஸாம், ஒடிஷா மாநிலங்களில் ஏராளமான கிளைகளை தொடங்கியது. இந்த நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் சுதிப்தா சென் நடத்தி வந்தார்.
இந்நிலையில், இந்நிறுவனத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட செக்குகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிவிட்டன. இதனால் பீதி அடைந்த முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் முற்றுகையிட்டதால் நிறுவனம் மூடப்பட்டது.
பொதுமக்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை சாரதா சிட்பண்ட் நிறுவனம் மோசடி செய்தது தொடர்பாக மேற்கு வங்காளத்தில் இரண்டு மற்றும் ஒடிசாவில் ஒரு மனு உட்பட மூன்று வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.
இதற்கு முன் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ விசாரிக்க எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று ஒடிசா அரசு தெரிவித்தது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இது மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது.