சிறையில் சசிகலாவுக்கு ரூ. 30 தினக்கூலி... காய்கறி வளர்ப்பு, அழகு பொருட்கள் செய்ய ஆர்வம்!
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா காளான், பழங்கள் வளர்ப்பு செய்து தினக்கூலியாக ரூ. 30 பெற்று வருகிறார்.
பெங்களூரு : பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசி இருவரும் கன்னடம், கணினி பயிற்சிக்குப் பிறகு காளான், பழங்கள் வளர்ப்பு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு தினக்கூலியாக அவர்களுக்கு ரூ. 30ம் வழங்கப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15, 2017ம் ஆண்டு அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஓராண்டை கழித்துவிட்டனர்.
சிறையில் சசிகலா கன்னடம், கணினி பயிற்சி பெற்று வருகிறார். சசிகலாவோடு இளவரசியும் கன்னடம் பயின்று வருகிறார். இது தவிர காலை மற்றும் மாலை நேரத்தில் தோட்ட வேலைகளிலும் இருவரும் ஈடுபடுகின்றனராம்.
சசிக்கு ரூ. 30 தினக்கூலி
பெண்கள் சிறைப் பகுதியில் காய்கறிகள், பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. சசிகலாவும், இளவரசியும் இந்த தோட்டத்தில் காளான் மற்றும் தர்பூசணி பழங்கள் விளைவித்து வருகின்றனராம். இதற்காக தினக்கூலியாக இவர்களுக்கு ரூ. 30ம் வழங்கப்படுகிறதாம்.
கணினி பயிற்சி மேற்கொள்ளும் சசி
தோட்ட வேலை, கன்னட மற்றும் கணினி பயிற்சிக்குப் பின்னர் வளையல், மணிகள் கோர்ப்பது உள்ளிட்ட அழகுக்கலை பொருட்கள் செய்யும் பணிகளையும் சசிகலா செய்து வருகிறாராம். அழகுக் கலை பொருட்கள் செய்வதில் ஆர்வத்துடன் இருக்கிறாராம் சசிகலா
சாதாரண உடையில் சசிகலா
தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா பெங்களூரு சிறையில் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது சசிகலா சாதாரண உடையில் இருந்ததை கண்டு அதிகாரி ஷாக் ஆகியுள்ளார். இதனையடுத்து சசிகலா அறைக்கு சென்று சோதனை நடத்தியுள்ளார் அங்கு பையில் கலர் கலர் ஆடைகள் இருந்துள்ளன. இது குறித்து சிறைத்துறையினரிடம் அவர் கேட்ட போது சட்ட விதிகளுக்கு உட்பட்டே சசிகலாவிற்கு சாதாரண ஆடை வழங்கப்படுவதாக கூறியுள்ளனர்.
அதிகாரிக்கு பரிசு கொடுத்த சசிகலா
எனினும் அதிகாரி சோதனையால் எந்த சலனமும் அடையாத சசிகலா தான் செய்த வளையலை மகளிர் ஆணையத் தலைவருக்கு பரிசளித்துள்ளார். இதற்காக அந்த அதிகாரிகள் பணம் கொடுக்க முற்பட்ட போது என்னுடைய பரிசாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் சசிகலா.