கைதிகள் மோதும் அபாயம்-ஆட்சிக்கு அவப்பெயர்: சசிகலாவை வேறு மாநில சிறைக்கு மாற்றும் கர்நாடகா?
சசிகலாவை கர்நாடகாவில் இருந்து வேறு மாநில சிறைக்கு மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு: சசிகலாவால் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகள் இடையே மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால் அவரை வேறு மாநில சிறைக்கு மாற்ற கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.,
ஜெயலலிதா மறையும்வரை திரைமறைவு அரசியல் செய்து வந்தார் சசிகலா. ஜெயலலிதாவுக்குப் பின்னர் சசிகலா தடாலடி அரசியலில் குதித்தார்.
எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்து முதல்வராக முயற்சித்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா.
தொடர் புகார்கள்
சசிகலா சிறைக்கு போன நாள் முதலே அவருக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. ஆனால் கர்நாடகா அரசு இதை தொடர்ந்து மறுத்து வந்தது.
ரூபா அறிக்கை
இந்த நிலையில் கர்நாடகா சிறைத்துறை டிஐஜி ரூபா அதிரடியாக அனுப்பிய அறிக்கை பெரும் களேபரத்தையே ஏற்படுத்விட்டது. அம்மாநில சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணவுக்கு அனுப்பிய அறிக்கையில், ரூ2 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு சசிகலாவை சிறையில் சொகுசாக இருக்க அனுமதித்துள்ளனர் என குண்டை தூக்கிப் போட்டார்.
கைதிகளிடையே மோதல்
இதனால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே பரப்பன அக்ரஹார சிறை கைதிகளில் ஒரு பிரிவினர் டிஐஜி ரூபாவுக்கு ஆதரவாகவும் மற்றொரு பிரிவினர் எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் சிறையில் மோதல் உருவாகும் அபாயம் ஏற்பட்டது.
கவலையில் காங்கிரஸ்
இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் சசிகலா விவகாரத்தால் மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது; அதுவும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இது தேவையற்ற பிரச்சனையாக உருவெடுக்கிறதே என நொந்து போய் இருக்கிறது கர்நாடகா அரசு.
வேறு மாநில சிறைக்கு
இதனால் சசிகலாவை வேறு மாநில சிறைக்கு மாற்றிவிடலாமா? எனவும் ஆலோசித்து வருகிறது அம்மாநில அரசு. சசிகலாவை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தின் அனுமதி தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.