எதிஹாட்-க்கு எதிரான வழக்கு: திருத்த மனுவை தாக்கல் செய்ய சு.சுவாமிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் நிறுவனத்துக்கு கூடுதலாக போக்குவரத்து உரிமங்களை வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதிய திருத்த மனுவைத் தாக்கல் செய்யுமாறு பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நரேஷ் கோயலுக்கு சொந்தமான ஜெட் ஏர்வேஸின் 24% பங்குகளை எமிரேட்ஸின் எதிஹாட் நிறுவனம் வாங்கியது. இதைத் தொடர்ந்து எதிஹாட் நிறுவனத்துக்கு கூடுதல் போக்குவரது உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் இதனால் மத்திய அரசுக்கு ரூ9,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெட் ஏர்வேஸ்- எதிஹாட் நிறுவனங்களுக்கு இடையேயானதாக மட்டும் இதை பார்க்க கூடாது. முதன்மையான பிரச்சனையாக இருக்கும் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குமான போக்குவரத்து உரிமங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்.
ஆகையால் இந்த வழக்கில் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு ஆகியவற்றையும் ஒருதரப்பாக சேர்க்க வேண்டும்.
இதனடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமி புதிய திருத்த மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.