உத்தரகாண்ட்டில் மே 10-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவு!
டெல்லி: உத்தரகாண்ட் சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் வரும் 10-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் கட்சியின் ஹரீஷ் ராவத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த நிலையில் திடீரென ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதை அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. இந்த வழக்கு கடந்த 3-ந் தேதி விசாரணைக்கு வந்த போது, உத்தரகாண்டில் உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தலாம் எனவும், இது குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை கேட்டு தெரிவிக்குமாறும் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம் நீதிபதிகள் யோசனை கூறினர்.

2 நாட்கள் அவகாசம்
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான முகுல் ரோத்தகி, உத்தரகாண்டில் அரசியல் தேக்கநிலையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த பரிந்துரையை மத்திய அரசு முக்கியமாக எடுத்துக்கொண்டு தீவிரமாக பரிசீலிப்பதாகவும், இதற்கு மேலும் 2 நாட்கள் அவகாசம் வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசு ஒப்புதல்
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோரை கொண்ட பெஞ்ச், மத்திய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கினர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு தயார் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

மே 10-ல் வாக்கெடுப்பு
இதனடிப்படையில் வரும் 10-ந் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணிவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அம்மாநில சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜனாதிபதி ஆட்சி தளர்வு
அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 10-ந் தேதியன்று மட்டும் ஜனாதிபதி ஆட்சி 2 மணிநேரத்துக்கு தளர்த்தப்படுகிறது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சி தொடருமா? ரத்தாகுமா? என உச்சநீதிமன்றம் உத்தரவிடும்.












Click it and Unblock the Notifications