நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி: நீட் தேர்வு குறித்து வழக்கு விசாரிக்கப்படுவதால் அதை ரத்து செய்ய கோரும் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறுவதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேசிய தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக சட்டசபையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு நாளில் சிபிஎஸ்இ விதித்த கெடுபிடிகளால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.
வரும் ஜூன் 8-ஆம் தேதி இந்த தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கேட்கப்பட்ட நீட் தேர்வு கேள்விகள் ஒரே மாதிரியாக இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கானது நேற்று மதுரை கிளை நீதிபதி முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக சிபிஎஸ்இ, மத்திய அரசு ஆகியன ஜூன் 7-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் இடைக்காலத் தடை விதித்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யும் வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அதை விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.