குற்றவாளிக்கு அடைக்கலம்? டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் வீட்டில் சோதனை நடத்த கோவா கோர்ட் உத்தரவு!!
பனாஜி: அரசு ஊழியரைத் தாக்கிய வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கோவா முன்னாள் அமைச்சர் பிரான்சிஸ்கோ டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வீட்டில் பதுங்கியிருக்கிறாரா? என சோதனை நடத்த கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவா மாநிலத்தில் 2006ஆம் ஆண்டு மின்சார வாரிய இளநிலைப் பொறியாளர் ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் பிரான்சிஸ்கோ மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவா நீதிமன்றம் பிரான்சிஸ்கோவுக்கு 6 மாத சிறைத் தண்டனையும் ரூ1,500 அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு போனார் பிரான்சிஸ்கோ.. ஆனால் உச்சநீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.
இதனால் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தார் பிரான்சிஸ்கோ.. ஆனால் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது முதல் கடந்த 2 வாரங்களாக அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது.
இது தொடர்பான இன்றைய வழக்கு விசாரணையின் போது ஆஜரான பாதிக்கப்பட்ட நபரின் வழக்கறிஞர், டெல்லியில் கோவா மாநிலத்தைச் சேர்ந்தவரான பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, அக்பர் சாலையில் பிரான்சிஸ்கோவை பார்த்ததாக குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் வீட்டில் பிரான்சிஸ்கோ பதுங்கியுள்ளாரா? என சோதனை நடத்த கோவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.